சிஏஜியின் அடுத்த அறிக்கை மோடி அரசின் வரவு செலவு கணக்கு செயல்படுத்தும் முறையையும் அதன் தரத்தையும் கடுமையாக விமர்சிப்பதாக உள்ளது. இது வெறும் கணக்கு எழுதும் முறையில் குறைபாடுகளா? அல்லது அதற்கு பின்னால் பெரும் முறைகேடு உள்ளதா என்பது ஆழமான விசாரணையில்தான் தெரியும். ஆனால் அத்தகைய விசாரணைக்கு இந்த அரசு முன்வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. 2021-22ம் நிதியாண்டில் ரூ.1,48,95,450 கோடி வரவும் ரூ.1,48,93,046 கோடி செலவும் செய்யப்பட்டுள்ளது. தேசத்தின் 140 கோடி மக்களின் பணத்தில் நடக்கும் இந்த மிகப்பெரிய வரவு-செலவு பற்றிய விவரங்கள் மிகவும் துல்லியமாகவும் தரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். அதற்காக பல வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை அரசாங்கங்கள் பொருத்தமாக பின்பற்றுகின்றனவா என்பதை ஆய்வு செய்யும் பொறுப்பு தணிக்கை ஆணையத்துக்கு உள்ளது. இது தொடர்பான ஆணையத்தின் அறிக்கை எண் 21/2023 மோடி அரசின் விதிமீறல்களை விரிவாகப் பட்டியலிட்டுள்ளது. “கணக்கு மற்றும் நிதி அறிக்கைகள் நடைமுறைகளின் தரம்” எனும் தலைப்பின் கீழ் 27 பக்கங்களுக்கு தனி ஆய்வறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றிய அரசின் விதிமீறல்கள் அதிர்ச்சிகரமாக உள்ளன.
பொதுத்துறை பங்கு விவரங்களில் முரண்பாடுகள்
பொதுத்துறை பங்குகள் விற்பனை எனும் பெயரில் தனியார்மயம் ஆக்குவதுதான் பாஜக அரசின் முக்கிய கொள்கை. இது தேசத்தின் சுயசார்பை சிதைக்கும் என அனைத்து தொழிற்சங்கங்களும் இடைவிடாது வலியுறுத்தி வருகின்றன. இந்த தவறான நடைமுறையிலும் கூட ஒன்றிய அரசு பல்வேறு நிறுவனங்களில் உள்ளதாக கூறும் பங்குகள் எண்ணிக்கையில் பெரும் குழப்பங்களும் முரண்பாடுகளும் உள்ளதாக தணிக்கை ஆணையம் கீழ்கண்டவாறு பட்டியலிடுகிறது: (அட்டவணை) ஏன் இவ்வளவு மாறுபாடுகள்? யாருடைய அறிக்கை தவறு? அரசினுடையதா? சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தவறா? வரும் காலங்களில் இந்த தவறு சரி செய்யப்படும் என அரசு கூறுகிறது. ஆனால் இந்த விளக்கத்தை ஆணையம் ஏற்கவில்லை. ஏனெனில் கடந்த பல வருடங்களாக இத்தகைய தவறு நடப்பதாகவும் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டியும் இந்த தவறு சரிசெய்யப்படவில்லை எனவும் ஆணையம் கூறுகிறது. கோடிக்கணக்கான அளவுக்கு பங்குகள் கையிருப்பு குறித்து முரண்பட்ட தகவல்கள் தொடர்ந்து பதிவு செய்யப்படுவது அரசின் திறமையின்மையையும் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டாலும் சரி செய்யாத ஆணவத்தையுமே வெளிப்படுத்துகின்றது. மேலும் ஒட்டு மொத்தமாக அரசுக்கு கிடைக்கும் அல்லது கணக்கில் வைக்கப்படும் டிவிடெண்ட் (பங்காதாயம்) தொகையிலும் குளறுபடிகள் ஏற்படும் வாய்ப்பை இது உருவாக்குகிறது. டிவிடெண்ட் என்பது அரசின் முதலீடுக்கு கிடைக்கும் பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள ஈவுத்தொகை.
செஸ் (CESS) வரிகள்
செஸ் வரியை விதிக்கும் பொழுது ஒன்றிய அரசு அதனை மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை என்பது சட்டம். இதன் மூலம் நிதியின் மீது ஒன்றிய அரசு தனது பிடியை வலுவாக்கிக் கொள்கிறது. இது மாநிலங்களுக்கு பெரும் இழப்பு. பாஜக அரசு, மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டவும் கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி உட்பட பெரும் நிதி சலுகைகளை தருவதால் உருவாகும் இழப்புகளை ஈடுகட்டவும் தன்னுடைய நிதி ஆதாரத்தை வலுவாக்கவும் இந்த சூழ்ச்சியை அரங்கேற்றுகிறது. 2017-18ம் ஆண்டில் ரூ.2,22,308 கோடியாக இருந்த செஸ் வரி 2021-22ல் 4,78,680 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 26.43 சதவீதம் ஆகும். மேலும் செஸ் வரி எந்த நோக்கத்துக்காக போடப்படுகிறதோ அந்த நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் மோடி அரசு இதனை மீறியுள்ளதை தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டுகிறது:
• கிராமப்புற அலைபேசி/இணையம் போன்ற தகவல் தொடர்பு வசதிகளுக்காக செஸ் வரி ரூ.10,376 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.8,300 கோடி மட்டுமே கிராமப்புற தகவல் வசதிகளுக்கான கணக்கில் மாற்றப்பட்டுள்ளது. மீதி 2076 கோடி எங்கே?
• கல்வி மற்றும் சுகாதார கட்டமைப்புக்காக ரூ.52,732 கோடி செஸ் வசூல் செய்யப்பட்டுள்ளது. 31,788 கோடி மட்டுமே சம்பந்தப்பட்ட கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மீதி 20,944 கோடி எங்கே?
• கடந்த 5 நிதியாண்டுகளில் மூத்த குடி மக்கள் நல நிதிக்கு ரூ.1790.57 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 274.91 கோடி மட்டுமே அந்த நிதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மீதி 1515.66 கோடி எங்கே? • புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.184.51 கோடி சந்தாதாரர்களாகிய ஊழியர்களின் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வேறு கணக்கில் இணைக்கப்பட்டுள்ளது.
• பிரதமரின் கீழ் செயல்படும் ISRO விதிகளை மீறி சுமார் 16 வங்கிக் கணக்குகளில் ரூ. 154.94 கோடி வைத்துள்ளது. கடந்த இரு வருடங்களாக இதனை சுட்டிக்காட்டியும் இந்த வங்கி கணக்குகள் மூடப்பட வேண்டும் என வலியுறுத்தியும் அது செய்யப்படவில்லை. ஏன் இந்த விதி மீறல்? • கையிருப்பு நிதி தரவுகள் குறித்த ரிசர்வ் வங்கியின் கணக்குக்கும் அரசின் கணக்குக்கும் ரூ. 1040.77 கோடி வேறுபாடு உள்ளது.
• மருத்துவம்/ கல்வி/ வெள்ள தடுப்பு போன்ற சில முக்கிய பிரிவுகளின் கீழ் மொத்த செலவில் 60.41 சதவீதம். அதாவது, சுமார் ரூ.47,651 கோடி உதிரி செலவுகள் என காட்டப்பட்டுள்ளது.
• சிறு சேமிப்புகளுக்கு அரசு தர வேண்டிய மொத்த நிதி ரூ.6,23,006. 29 கோடி. ஆனால் அரசின் அறிக்கை கூறுவதோ 6,01,455.58 கோடி. சுமார் ரூ.21,560. வேறுபாடு தெரிகிறது. எங்கே இந்த தொகை?
• வெளிக்கடனை கணக்கீடு செய்யும் பொழுது நடப்பு டாலர் பரிவர்த்தனை மதிப்புக்கு பதிலாக பழைய மதிப்பை அடிப்படையாக கொள்வது தவறு என F-RM சட்டம் கூறுகிறது. இதன் விளைவாக வெளிக்கடன் தொகை ரூ.2.19 லட்சம் கோடி குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.
• ரயில்வே துறை 2020-21ம் ஆண்டில் ரூ.8,127 கோடியும் 2012-22ம் ஆண்டில் 23,885 கோடியும் அங்கீகரிக்கப்படாத செலவுகளை செய்துள்ளது. சென்ற ஆண்டு இத்தகைய செலவு தவிர்க்கப்பட வேண்டும் என ஆணையம் சுட்டிக்காட்டியும் அதனை அமலாக்க ரயில்வே துறை முன்வரவில்லை.
இப்படி பல பிரிவுகளில் ஒன்றிய அரசின் நிதி தரவுகளில் கடுமையான வேறுபாடுகளும் குழப்பங்களும் நிலவுகின்றன என்பதை சிஏஜி அறிக்கையிலிருந்து நாம் அறியலாம். பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மக்களின் வரி வருவாயை கையாளும் அரசு மிக துல்லியமாக வரவு-செலவு கணக்குகளை பராமரிப்பது அவசியம். ஆனால் மோடி அரசு அதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. இது நிதி தரவுகள் பற்றிய வேறுபாடுகள் மட்டும்தானா? அல்லது நிதிமுறை கேடுகள் நடந்துள்ளதா என்பதை முழு விசாரணை மூலமே நிலைநாட்ட முடியும். அத்தகைய விசாரணையை பாஜக அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதும் சூரியன் மேற்கே உதிக்கும் என்பதும் ஒன்றுதான்!
- அ. அன்வர் உசேன்