புதுதில்லி, ஏப். 21- இஸ்லாமியர் பகுதிக்குள் புகுந்து வேண்டுமென்றே மதவெறியைத் தூண்டுவது, அப்போது மோதல் ஏற் பட்டால், அதையே காரணமாக வைத்து, இஸ்லாமியர்கள் மீது வழக்குப் போட்டு, அவர்களைச் சிறையில் அடைப் பது, யாராவது தலைமறைவானால் அவர்களின் வீடுகளின் ஒருபகுதியை புல்டோசர் மூலம் இடிப்பது, அப்படியும் சரணடையாவிட்டால் முழுமையாகவே வீட்டை இடித்துத் தரைமட்டமாக்குவது, உடமைகளை சூறையாடுவது, இது பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி னால், வீடு ஆக்கிரமித்துக் கட்டப் பட்டிருந்தது; நோட்டீஸ் கொடுத்தும் காலி செய்யவில்லை; அதனாலேயே வீடு களை இடித்தோம் என்று காரணம் கூறுவது...
-இதுதான் பாஜக ஆட்சியாளர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக கையில் எடுத்துள்ள புதிய உத்தியாகும். உ.பி. மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில்தான் இந்த புல்டோசர் உத்தி முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. அங்குள்ள ஒருவரின் வீட்டுக்கு அருகே புல்டோசரை நிறுத்தியதன் மூலம் அடுத்த நாளே அவரை சரணடையச் செய்தனர். அதேபோல சஹரான்பூரில் அமீர், ஆசிப் ஆகிய இருவரது வீட்டுக்குச் சென்ற உ.பி. பாஜக அரசின் காவல்துறை, அங்கு வீட்டின் பாதியை இடித்து விட்டனர். உடனடியாக சரணடைந்தால் மீதமுள்ள வீடு தப்பும் என்று மிரட்டினர். இதன்மூலம் ஆசிப், அமீர் ஆகியோரையும் சரண டைய வைத்தனர். இஸ்லாமியர்களை பழிவாங்குவதற் கான இந்த முறையை உத்தரப்பிர தேசத்தில் பரிசோதித்துப் பார்த்த பாஜக ஆட்சியாளர்கள், அண்மையில், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கும் இதனை விரிவுபடுத்தினர். சங்-பரிவாரங்கள் கடந்த ஏப்ரல் 10 அன்று நாடு முழுவதும், இஸ்லாமியர் குடி யிருப்புப் பகுதிகளின் வழியாக ராம நவமி ஊர்வலங்களை நடத்தினர். மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களிலும் இதே போல ஊர்வலங்கள் நடத்தப் பட்டன. அப்போது, வழிநெடுகிலும் இஸ்லா மியர்க்கு எதிராக ஆத்திரமூட்டல் நட வடிக்கையிலும், வன்முறையிலும் இறங்கி னர். இந்தப் பின்னணியில், ராம நவமி ஊர்வலம் மீது இஸ்லாமியர்கள் கல்வீசிய தாக கூறி, வழக்குகளைப் போட்டு நூற்றுக் கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
அதுமட்டுமல்லாமல், ராம நவமி ஊர்வலம் நடந்த மறுநாளே, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ம.பி. பாஜக அரசு, ஏப்ரல் 11 அன்று காஸ்கஸ்வாடி பகுதியில், முஸ்லிம்களுக்குச் சொந்த மான 16 வீடுகள், 29 கடைகளை புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது. ‘ஆக்கிரமிப்பைத்தான் அகற்றினோம்’ என்று காரணம் கூறினாலும், ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (PMAY) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடும் கூட இடித்துத் தள்ளப்பட்டது. பிஎம்ஏஒய் திட்டத்தில் கட்டப்பட்ட வீடு என்று எழுதப்பட்டு இருந்தது மாட்டுச் சாணம் கொண்டு அழிக்கப்பட்டு, இந்த செயலை பாஜக அரசு அரங்கேற்றியது. இதற்கு அடுத்ததாக கடந்த ஏப்ரல் 14 அன்று குஜராத்தின் ஆனந்த் மாவட்டம் கம்பாத் நகரிலும், ராமநவமி ஊர்வலத்தின் மீது கல்வீச்சு நடந்ததாக கூறப்படும் சாகர்புரா சாலைப்பகுதியிலும் இரண்டு புறமும் இருந்த முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் புல்டோசர் மூலம் இடிக்கப் பட்டன. “சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ள கட்டடங்கள், வீடுகள், கடை களும் இடிக்கப்படுகின்றன” என்று, ம.பி. மாநிலத்தின் கோர்கான் மாவட்ட ஆட்சியர் அனுகிரகா கூறியதையே, ஆனந்த் மாவட் டத்தின் ஆட்சியர் எம்.ஒய். தக்ஷினும் கூறினார்.
இந்த வரிசையிலேயே, தில்லியில் கடந்த 16-ஆம் தேதி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது, இஸ்லாமியர்கள் கல்வீச்சு நடத்தியதாக கூறப்படும், ஜஹாங்கீர் புரி பகுதிக்கும் புல்டோசர் களை அனுப்பி வைத்தது. ஆனால், சரியான நேரத்தில் உச்சநீதிமன்றம் தலை யிட்டதாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நடத்திய துணிச்சல் மிகு போராட்டத்தாலும் ஜஹாங்கீர்புரி இஸ்லாமியர்களின் வீடுகள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. முன்னதாக ஜஹாங்கீர்புரியில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது வழக்கமான ஆக்கிரமிப்பு அகற்றம்தான் என்று தில்லி வடக்கு மாநகராட்சி மேயர் ராஜா இக்பால் சிங் கூறினாலும், தில்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, “ஜஹாங் கீர்புரியில் கலவரக்காரர்களின் சட்ட விரோத கட்டுமானங்களைக் கண்டறிந்து புல்டோசர்களைப் பயன்படுத்தி அவற்றை இடித்துத் தள்ளவேண்டும்” என்று வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (NDMC) செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியிருந்தார் என்பதும், அதைத் தொட ர்ந்துதான் மறுநாளே ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் ஏராளமான புல்டோசர்கள் ஜஹாங்கீர்புரிக்கு அணி வகுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.