அமிர்தசரஸ்,மார்ச் 16- விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங் பிறந்த ஊரில் நடைபெற்ற விழாவில் பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் மான் சிங் பதவியேற்றுக்கொண்டார். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து பஞ்சாப்பின் புதிய முதலவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் சிங் பதவியேற்பு விழா பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் மார்ச் 16 புதனன்று நடைபெற்றது. அவருக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமன அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.