states

img

அவன் அமரன் இடதுசாரிக் கதையாடல் முயற்சிகளின் முன்னோடி சினிமா...

இடதுசாரிக் கருத்தியலை வைத்துக் கதை சொல்லும் முயற்சி தமிழில் அவ்வப்போது நடப்பதுண்டு. அப்படியானதொரு தொழிலாளிவர்க்கச் சார்பு முன்னோடித் திரைப்படம்தான் 1958 ல் வெளியான “அவன் அமரன்”. 
முதலாளித்துவத்தின் கொடூரமான முகத்தை அம்பலப்படுத்தி, அந்த அநீதிக்கெதிரான உழைப்பாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தைப் பதிவு செய்த இந்த அவன் அமரனை எழுதி, தயாரித்தவர் நாகர்கோவில் எஸ். நாகராஜன். மார்க்சியத் தத்துவத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவரான இவர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு “பீப்பிள்ஸ் ஃபிலிம்ஸ்” - என்றே பெயர் சூட்டியிருந்தார். அதன் மூலமாகவும் இடதுசாரிக் கொள்கையை ரசிகர்கள் மனங்களில் விதைக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்நாளின் மாறுபட்ட முத்திரை இயக்குநரான வீணை எஸ்.பாலச்சந்தர் இந்தப் படத்தை இயக்கினார். 

படத்தின் கதை இவ்வாறு இருந்தது:

தனது ஒரே மகனை நல்லவிதமாக வளர்க்க வேண்டி அரும்பாடுபடும் ஏழைப் பெண்ணொருத்தி கிடைக்கிற வேலைகளையெல்லாம் கௌரவம் பாராது செய்கிறாள். எதிர்பாராது நடக்கும் ஒரு விபத்து அவளைக் கையாலாகாதவளாக்கிவிடுகிறது. வாழ்க்கை துயர்மிகுந்ததாக மாறுகிறது. வாலிப வயதையடையும் மகன் அவனது வகுப்புத் தோழியிடத்தில் காதல் கொள்கிறான். அந்தத் தோழியோ ஒரு பெரிய மில் முதலாளியின் மகள். அந்த முதலாளியைப் பகைத்துக்கொண்டு இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.  இதனிடையே அந்த இளைஞனுக்கு இங்கிலாந்தில் சட்டம் பயில வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு தேர்ந்த வழக்கறிஞனாக நாடு திரும்பும் அவன் குறைந்த ஊதியத்திற்குப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் அந்த மில் தொழிலாளர்களின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான். அவர்களைக் கடுமையாகச் சுரண்டிக் கொழுக்கும் அந்த மில் முதலாளியை எதிர்த்துச் சட்டப்போராட்டத்தை நடத்துகிறான்.  தன்னை மீறித் தன் மகளைத் திருமணம் செய்துகொண்ட, தனக்கெதிராகத் தொழிலாளர்களைத் தூண்டிவிடுகிற அவனுக்கு எதிராக அந்த ஆலையின் முதலாளி நிறையத் தொந்தரவுகளைத் தருகிறார். தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, போனஸ் போன்றவற்றைக் கோரி வேலை நிறுத்தம் செய்கிறார்கள். கெடுமதியோடு முதலாளி தனது கூலிப்படையின் மூலம் தொழிலாளிகளை அடித்து உதைக்கிறான். அவர்கள் உடைமைகளுக்குத் தீ வைக்கிறான். அந்தக் கலவரத்தில் அந்த இளைஞன் தனது காதல் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் அநாதைகளாக்கிவிட்டு உயிர் துறக்கிறான். தனது கணவனின் இலட்சியத்தைக் கையிலெடுக்கும் காதல் மனைவி அவன் விட்டுச்சென்ற கொள்கையை நிறைவேற்றவும் அந்த மில் தொழிலாளர்களின் நலனுக்காக நின்ற கணவனின் பணியைத் தொடரவும் உறுதியேற்கிறாள். இப்படியாக வழமையான தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு புதிய காற்றை ரசிகர்கள் வியந்து சுவாசிக்க வழி செய்தது இந்த அவன் அமரன் திரைப்படம்.

சட்டம் பயின்ற அந்த இலட்சிய இளைஞன் வேடத்தில் மிக அற்புதமாக நடித்திருந்தார் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. வசன உச்சரிப்பில் அந்நாளில் அவரது முத்திரைத் திறன்  ரசிகர்களின் மனங்கவர்ந்தது. மில் முதலாளியின் மகளாக ராஜசுலோட்சனா நடிப்பு வெகு இயல்பாகப் பாராட்டும்படி இருந்தது. மகளின் செயல்களுக்கு வருந்தி உருகும் மில் முதலாளியாக நடிகர் பாலையா தொழிலாளர்களுக்கு எதிரான வில்லன் நடிப்பில் அசத்தினார். நாயகனின் ஏழைத் தாயாகத் தோன்றி, காண்போரைக் கண்கலங்கச் செய்தார் நடிகை கண்ணாம்பா.  நியூடோன், பாரமௌன்ட், ரேவதி ஸ்டூடியோக்களில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டது. டி.எம். இப்ராகிம் இசையில் பாடல்களை மருதகாசி, கு.மா.பாலசுப்பிரமணியம், கு.ச.கிருஷ்ணமூர்த்தி, கம்பதாசன், குயிலன், சுரபி ஆகியோர் எழுதியிருந்தார்கள். சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம். ராஜா, ஜிக்கி, ஏ.பி. கோமளா, பி. சுசீலா ஆகியோர் பாடினார்கள். கே.ஆர். ராமசாமியும் தனது சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியிருந்தார். வங்க சினிமாவின் பிரபல நிமாய் கோஷ் அற்புதமாக ஒளிப்பதிவு செய்தார்.  சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் நின்று உரத்துப்பேசிய இந்த அவன் அமரன் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். இதனால் உணர்வுப்பூர்வமாக எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்த அத்தனை பேருக்கும் ஏமாற்றத்தையே பரிசளித்துவிட்டு நினைவில் மட்டும் ஒரு அனுபவமாக நின்றுபோனான் இந்த முன்னோடி அமரன்!