states

ஆகம விதிகளில் தேர்ச்சிபெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகராகலாம்!

புதுதில்லி, ஆக. 22 - கோவில் ஆகம விதிகளின்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.  இந்த விவகாரத்தில், முத்து சுப்ர மணிய குருக்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

சேலம் சுகவனேஸ்வர் கோயில்

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில்  காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப கோயில் செயல் அலுவலர் கடந்த 2018-இல் அறிவிப்பாணை வெளியிட்டார். ஆகம விதிகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றவர்கள் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அந்தக் கோயிலில் பரம்பரை அர்ச்சகராக பணியாற்றிவரும் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர். ஆர். அருண் நடராஜன் ஆஜரானார்.

நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி  என்.ஆனந்த் வெங்கடேஷ், கடந்த ஜூலை 26 அன்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள் எவை என் பதைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழு இன்னும் தனது பணிகளை தொடங்கவில்லை. அந்தக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை அர்ச்ச கர்களை நியமிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப் படவில்லை. பல கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் குழுவின் அறிக்கைக் காக காத்திருந்தால், அன்றாடம் நடை பெற வேண்டிய பூஜை, அபிஷேகம் போன்றவற்றை தடையின்றி மேற் கொள்வதில் சிக்கல் ஏற்படும். சேலம் சுகவனேஸ்வரர் கோயிலைப் பொறுத்த வரை ‘காரணம் - ஆகமம்’ பின்பற்றப்படு வதாக சொத்துப் பதிவேட்டில் உள்ள தாக அரசுத் தரப்பில் வாதிடப் பட்டுள்ளது. எனவே, ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை, குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற் றும் கோயில்களில் அர்ச்சகர்களாக நிய மிக்கலாம். அதற்கு எந்தவொரு சாதி யும் தடையாக இருக்காது. அதாவது,  ஆகம விதிகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும்போது, பரம்பரை, பரம்பரை யாக குறிப்பிட்ட சாதியினரை மட்டும்தான் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும் என உரிமை கோர முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் புதி தாக அர்ச்சகர்களை தேர்வு செய்யும் வரை மனுதாரர் (முத்து சுப்பிரமணிய குருக்கள்) பணியில் தொடர அனு மதிக்க வேண்டும். பின்னர் நடத்தப்படும் தேர்வில் மனுதாரரையும் (முத்து சுப்பிர மணிய குருக்களையும்) பங்கேற்க அனுமதித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

முத்து சுப்பிரமணிய குருக்கள் மேல்முறையீடு

ஆனால், இந்த தீர்ப்பு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்கு களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதி ராகவும், சென்னை தலைமை நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராகவும் இருப்பதாகக் கூறி, முத்து சுப்பிரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஜூலை 28 அன்று விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறி ஞர் பி. வள்ளியப்பன், “ஆகம விதி களைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகராக வருபவர்கள் பரம்பரை  வழியாகத்தான் நியமிக்க வேண்டும்.  இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு உடனடியாக தடைவிதிக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அரசுத் தரப்பில் ஆஜரான, அரசு  தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம்,  “ஆகம விதிகளைப் பின்பற் றும் கோயில்கள் எவை, ஆகமங்களை பின்பற்றாத கோயில்கள் எவை என்பது குறித்து ஆய்வு செய்ய  அமைக்கப் பட்டுள்ள குழு தொடர்ந்து அதுகுறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த பணி  நடந்துவரும் நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கக்கூடாது. ஏனெனில், 2405 அர்ச்சகர் பணியிடங் கள் காலியாக உள்ளன” என்று வாதிட் டார்.

தடைவிதிக்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட றிந்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்த ரவுக்கு தடை விதிக்க மறுத்து, இந்த  வழக்கில் தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். எந்தச் சாதியினரும் அர்ச்சகர் ஆக லாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வும், தடைவிதிக்க மறுத்து விட்டதால், மனுதாரர் முத்து சுப்பிர மணிய குருக்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி கள் எம்.எம். சுந்தரேஸ்வர் மற்றும் ஜே.பி. பரிதிவாலா அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, சென்னை  உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றத் தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, “கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்தச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” எனக் கூறி, முத்து சுப்பிர மணிய குருக்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கோயில் அர்ச்சகர்களாக முடியும் என்று  காலம் காலமாக இருந்த கருவறைத் தீண்டாமையை உடைத்தெறிவதில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியமானதாக அமைந்துள்ளது.