ஹைதராபாத், மே 30- புதிதாக நியமிக்கப்பட உள்ள 21 புதிய கார்டினல்களின் பெயரை, உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். இதில், கோவா மற்றும் டாமன் கத்தோலிக்க திருச்சபைகள் பங்கைச் சேர்ந்த பேராயர் பிலிப் நெரி ஆண்டோனியோ செபாஸ்டினோ டி ரொசாரியா பெராவ், ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராயர் ஆண்டனி பூலா ஆகிய 2 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த 2 இந்தியர்களில் ஆண்டனி பூலா என்ற பாதிரியார் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்மூலம் கார்டினல் ஆகும் முதல் தலித் என்ற பெயரை ஆண்டனி பூலா பெற்றுள்ளார்.
இத்தாலியிலுள்ள வாடிகன் நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று ரெஜினா செலி பிரார்த்தனை என்ற பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இதற்கான அறிவிப்பை போப் பிரான்சிஸ் வெளியிட்டார். பேராயர் ஆண்டணி பூலா 1961-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்திலுள்ள சிந்துகுர் என்ற கிராமத்தில் பிறந்தவர். பெங்களூருவிலுள்ள புனித பீட்டர் பாண்டிபிகல் மதப் பள்ளியில் மேல் படிப்பை நிறைவு செய்த அவர், ஆந்திர மாநில பட்டியல்-பழங்குடியின ஆணையரகத்தில் பணியாற்றி இருக்கிறார். முதன்முதலில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கர்னூல் பேராயராக நியமிக்கப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஹைதராபாத் தலைமை பேராயராக நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார்.
தலித்துகளின் துயரங்களையும், தான் இளம் வயதில் பட்ட கஷ்டங்களையும் குறிப்பிடத் தவறாதவரான ஆண்டனி பூலா, தலித் மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்நிலையிலேயே தற்போது புதிய கார்டினல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். “ஆண்டனி பூலாவை கார்டினலாக தேர்வு செய்துள்ளது பெருமையளிக்கிறது. கடவுளின் கிருபையால் இது நடந்துள்ளது. தேவாலயப் பணிகளில் ஆண்டனி காட்டிய அர்ப்பணிப்பும் இதற்குக் காரணம். அவருக்கு தேவாலயம் பற்றி ஆழ்ந்த சிந்தனைகள் உண்டு. அவர் கடின உழைப்பாளி. ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் அனைவரும் இதனைக் கொண்டாடுகின்றனர்” என்று தெலுங்கு கத்தோலிக்க பேராயர் கவுன்சிலின் துணைச் செயலாளர் ஜோசப் அர்லகடா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.