states

பாஜக எம்எல்ஏ-வை வன்முறை வழக்கிலிருந்து பாதுகாக்க குஜராத் அரசு முயற்சிக்கிறது!

காந்தி நகர், நவ. 11 - வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ ஜடேஜாவை குஜராத் அரசு பாது காக்க முயற்சிப்பதாக அம்மாநில உயர் நீதி மன்றம் கடுமையாகச் சாடியுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி குஜராத் மாநிலம் கம்பாலியாவில் செயல்பட்டு வந்த ‘எஸ்ஸார்’ நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத் தில் ஈடுபட்டனர். தனியார் நிறுவனத்தால் விவ சாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி நிறுவனத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடு பட்ட கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக நிறுவன ஊழியர்களை ஏற்றிச்  செல்லும் வாகனங்கள் கடுமையாக தாக்கப்பட் டன. இதில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழி யர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் இந்த தாக்குதலில் காயமடைந்தனர். நிறுவனத்தின் பேருந்துகளும் கடுமையாக சேதமடைந்தன.  இந்த கலவரம் தொடர்பாக 46 பேர் மீது சட்ட விரோதமாக ஒன்றுகூடுதல், கலவரம் செய்தல்,  பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல்,  அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குஜராத் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. வழக்கு பதிவு செய்யப்பட்ட 46 பேரில் தர்மேந்திரா எனப்படும்  ஹகுபா ஜடேஜாவும் ஒருவர். இவர் தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினரான உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020-ஆவது ஆண்டு, ஹகுபா ஜடேஜா எம்எல்ஏ உட்பட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் திரும்பப்பெற்றுக் கொள்வதாக குஜராத் அரசு  வழக்கறிஞர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் மாவட்ட நீதிமன்றம் இந்த மனுவை ஏற்கவில்லை. மேல்முறையீட்டிலும் அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட குஜராத் அரசின் சிறப்பு வழக்கறிஞர் கமலேஷ்குமார் தவே, பாஜக எம்எல்ஏ ஜடேஜா மீதான வழக்கை ரத்து செய்யுமாறு குஜராத்  உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிரல் மேத்தா முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. 

அப்போது, குஜராத் அரசு சிறப்பு வழக்கறிஞர் கமலேஷ்குமாரையும், குஜராத் அரசையும் நீதிபதி நிரல் மேத்தா கடுமையான வார்த்தைகளால் சாடினார். அரசு சிறப்பு வழக்கறிஞரை மாநில அரசின் பொம்மை எனவும் அவர் விமர்சித்தார்.  அரசு சிறப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் மீது தனக்கு இருக்கும் கடமையை உணராமல், தனக்கு மேல் இருப்பவர்களை திருப்திபடுத்துவதற்காகவே செயல்படுகிறார். அரசு சிறப்பு வழக்கறிஞர் அரசாங்கத்தின் அறிவுரைகளின்படி மட்டுமே செயல்பட்டு அஞ்சல்காரராக மாறி இருக்கிறார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எத்தகைய சூழலிலும் மாநில அரசு தங்கள் எம்எல்ஏ-வை பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றம் நம்புகிறது. குற்றம்சாட்டப்பட்டவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்ற காரணத்துக்காக அவருக்கு எந்தவிதமான சிறப்பு சலுகையையும் அறிவிக்க முடியாது. சாதாரண குடிமக்களை விட பாஜக எம்எல்ஏ-வுக்கு எந்த சிறப்பு உரிமை தரப்படாது. குற்றம்  சாட்டப்பட்ட நபர் ஒரு அரசியல் தலைவர்  என்பதற்காகவே, பொதுநலன் பற்றி கவலைப் படாமல் அவர் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுவே சாமானியர்களாக இருந்தால் வழக்கை திரும்பப்பெறுவதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்காது. எனவே, இந்த மனுக்கள் அரசியல் நலனுக்காகவே தொடுக்கப்பட்டதாக தெரிவதால், குஜராத் அரசின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி நிரல் மேத்தா கூறியுள்ளார்.