திருச்சிராப்பள்ளி, அக்.29 - ‘இந்தியர்களாய் இணைவோம்; மனிதநேயம் காப்போம்’ என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஞாயிறன்று திருச்சியில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். போட்டியை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார். நீதிமன்ற சாலையில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக 5 கி.மீ தூரத்தை கடந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. இந்த ஓட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதி, திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, திருச்சி சிஎஸ்ஐ பேராயர் சந்திரசேகரன், மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் அன்பழகன், சர்வதேச தடகள வீரர் நல்.அண்ணாவி, மாண வர் சங்க மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது, மதிமுக துணை பொதுச்செயலாளர்
ரொகையாஷேக் முகமது, வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் லெனின், மாதா மெட்ரிகுலே ஷன் பள்ளி தாளாளர் சக்திவேல், தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் நலச்சங்க செயல் தலைவர் சந்தானசாமி, ஆசிய வலு தூக்கும் போட்டியில் ஆசியாவின் இரும்பு மனிதர் பட்டம் பெற்ற மணிமாறன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். இதில், முதல் பரிசாக ரூ.5000, 2-ஆம் பரிசாக ரூ.3000, ஊக்கப் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது. ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்திற்கான ஏற்பாடுகளை மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் ஹரி ராமச்சந்திரன், தீனா, மாவட்ட துணைச் செயலாளர் ஹரிபிரசாத், மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். சங்க மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி நன்றி கூறினார்.