states

img

ஜி-20 மாநாடு : தில்லி காவல்துறைக்கு காத்திருக்கும் சவால்

புதுதில்லி, ஆக.29- ஜி-20 கூட்டமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10 தேதிகளில் புது தில்லியில்  நடைபெற உள்ளது.  இம்மாநாட்டில் கலந்து கொள்ள  உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள்  இந்தியாவிற்கு வர இருக்கின்றனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்கள் தங்கும் நட்சத்திர விடுதிகளில் இருந்து நிகழ்ச்சி  அரங்கத்திற்கு அவர்கள் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பயண  நிகழ்ச்சி நிரல்கள் தீவிரமாக திட்டமிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு கருதி சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது பாதுகாப்பு வாகனங்களை கொண்டு வந்து அதில் பயணம் செய்வதாக கூறியுள்ளன . இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைத் தவிர பிற நாடுகள்  இடதுபுறம் அமர்ந்து ஓட்டும் வகையிலான வாகனங்களை   (Left  hand driving vehicle) பயன்படுத்துபவை.

 இந்திய மோட்டார் வாகனச் சட்ட பிரிவு 120-இன்  படி இந்தியச் சாலைகளில்  ஒட்டப்படும்  வாகனங்கள்  காரின் வலது புறத்தில் ஸ்டீயரிங் வைத்திருக்க வேண்டும்.  மேலும் வாகனங்களை பாதுகாப்பாக முந்திச் செல்வதிலும், பயணத்தின் போது  ஓட்டுநருக்கு பார்வைத் தன்மை சிக்கல்களை ஏற்படுத்தி விபத்துக்களுக்கு வழிவகுக்கும்; பொது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இடது புறம் அமர்ந்து ஓட்டும் வகை  கார்கள்  இந்தியாவில் அனுமதிக்கப்படவில்லை. எனவே, சாலை விதிமுறைகளை சரியாக மாற்றி, கவனிப்பது தில்லி போக்குவரத்து காவலர்களுக்கு பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து வர ஜெர்மனியில் இருந்து விலை மதிப்புள்ள - குண்டு துளைக்காத 50 (LHD) ஆடி கார்களை இறக்குமதி செய்ய உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.  உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு  பிரதிநிதிகளுக்கு  பாதுகாப்பு அளிக்கும் வகையில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்ட சுமார் 500 புதிய ஆர்எச்டி வாகனங்களை தில்லி காவல்துறை வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.