states

சாதி பேதமற்ற கல்விக் கூடம் உருவாகிட...

பள்ளிக்கூடம் என்பது கல்வியைப் போதிப்ப தற்கான இடம் மட்டுமல்ல. பல்வேறு வாழும் நிலைகளில் இருந்து வரும் குழந்தை கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும் இடமும்கூட. குழந்தைகள் ஒன்றுகூடி உறவாட, உரையாட, புதிய நட்புகளை உருவாக்கிக்கொள்ள என கூடிவாழ்வதற்கு ஏதுவான இடம் அது. அதுவும் வர்க்கமும் சாதியமும் இரண்டறக் கலந்துள்ள இந்தியாவில் சமூகத்தின் பல அடுக்குகளில் இருப்பவர்கள் இணைந்து வாழும் வாய்ப்பை உருவாக்குமிடம். இப்பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டிய இடம் கல்வித் துறை. சாதி, வர்க்கம், நிறம், பாலினம் உள்ளிட்ட பாகுபாடுகளைக் களை யும் மாபெரும் பணி பள்ளிக்கூடத்தினுடையது. கல்வியில் புதுமையான பல முயற்சிகளை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை எடுத்துவருவதைக் காண்கிறோம். தமிழகத்தின் தனித்துவமான கல்விக் கொள்கையில் சாதி, மத, பாலின வேறுபாடுகளைக் களைதலை முக்கியமானதாக முன்னெடுக்க வேண்டியது உள்ளது. அத்துடன் சமகாலத்தில் ஊடகங்கள், சமூக ஊடகங்கள், போதைப் பழக்கங்கள், வன்முறை  போன்ற தாக்கத்தால் சாதிய, மத ரீதி யான பிரிவினைகள் எளிதில் பரப்பப்படுவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் அரசியல் ஆளுமைகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் சார்பாக, மாணவர்களிடையே பாகு பாட்டைக் களைய மேற்கொள்ள வேண்டிய நட வடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது.

1. சமூகநீதியை மையப்படுத்திய பாடங்கள்

சமூகநீதியை மையப்படுத்தி தனிப் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட வேண்டும். கூடுதலாக, சமூகநீதியை வலியுறுத்தும் பாடங்கள் வெவ்வேறு பாடங்களின் கீழ் அதிகமாக இணைக்கப்பட வேண்டும். அறிவியல் பாடங்கள் என்பது அறிவியல் செயல்பாடாக மட்டும் இல்லா மல் அறிவியல் மனப்பான்மையை இணைத்து வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக, மூடநம்பிக்கைகளை அகற்றும் நோக்கமும் அதற்கு இருப்பது அவசியம். அதேபோல் வரலாற்றில் சமூகநீதிக்கான முன்னெடுப்புகள் குறித்து பாடங்களில் தனிப்பகுதியாக அமைக்கப்பட வேண்டும். மொழிப் பாடத்தில் நவீன பெண்ணிய, தலித்திய, குழந்தை மொழி, வாய்மொழிக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். துணைப்பாடம் முழுக்க முழுக்க சமூகநீதி பற்றிய கதைகள் மட்டுமே இருக்கும்படி அமைப்பது சரியாக இருக்கும். அதுவும் சமகாலத்தை பிரதிபலிக்கும் வகையான படைப்புகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

2. மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்துதல்

வாசிப்புப் பழக்கமே மனிதநேயத்தை வளர்க்கும் சக்தி. தற்போது, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்துவரும் வாசிப்பு சார்ந்த வகுப்பறைச் செயல்பாடுகள் மற்றும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் மூலமாக நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் அடுத்த கட்டமாக நூற்றுக்கணக்கான சமூக நீதிக் கதைகள் வெளி யிடப்பட வேண்டும். சமூக நீதி என்பது கூடி வாழுதல், வன்முறையைக் கைவிடுதல், சாதி,  மத, இன, பாலினப் பாகுபாடுகளைக் கடத்துதல் என்பதை கதை, பாடல், நாடகம் என பல்வேறு வடிவங்களில் இருப்பதும் அவற்றை பள்ளி மாண வர்களின் வாசிப்பிற்கு எடுத்துச் செல்லுதலும் அமைய வேண்டும்.

3. கூடிவாழுமிடமாக பள்ளிக் கூடங்களை மேம்படுத்துதல்

பள்ளிகளில் வெளிப்படையாகவும் மறைமுக மாகவும் தென்படும் சாதி, மதப் பிரிவினைவாத அடையாளங்களைக் களைதல். கைகளில் சாதிக் கயிறு; சாதி ரீதியான நட்புக் குழு; விளை யாட்டுக் குழு; மாணவிகளைக் கண்காணிக்க அமைத்திருக்கும் ஆண் குழுக்கள் போன்ற வற்றைக் கண்காணித்து படிப்படியாக அவற்றைக் களைய வேண்டும். எல்லோரும் சமம் என்பதை வலியுறுத்தும் அரசமைப்பின் பகுதிகளை மாணவர்களுக்கு வாசிக்க அளித்தல் அவசியம். மாணவர்களை ஒருங்கிணைக்கும் கலை நிகழ்வு, விளையாட்டுகள், சகோதரத்துவ செயல்பாடுகள், சமத்துவச் சங்க செயல்பாடுகளைத் திட்ட மிடுதல் வேண்டும். பெண்கள் தங்கள் வாழ்க்கை யில் மேம்பட பல்வேறு திட்டங்களை முன்னெ டுத்தது போல் ஆண் குழந்தைகளின் பழக்க  வழக்க மேம்பாட்டிற்கான சிறப்பு செயல்பாடு களை கல்வியின் ஒரு பகுதியாக ஆக்க வேண்டியுள்ளது.

4. ஆசிரியப் பண்புகளை வலுப்படுத்துதல்

மாணவர்களோடு நேரடியாக செயல்படு பவர்கள் ஆசிரியர்கள். எனவே, அவர்களை சாதி, மத, பாலின பாகுபாடற்ற உரையாடலுக்குத் தயார்ப்படுத்த வேண்டும். ஆசிரியர்களில் சிலர் சாதி, மத மனநிலையோடு இருப்பது, குழு  மனப்பான்மையோடு செயல்படுவது, வல்லுற வில் ஈடுபடுபவர்களாக இருப்பது, போதைப்பழக்க ங்களுக்கு ஆட்பட்டவர்களாக இருப்பது, பள்ளிச் செயல்பாடுகளில் மாணவர்களின்மீது அக்கறையற்று இருப்பது ஆகியவற்றை அறவே ஒழிக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆசிரியப் பண்புகளை உறுதிசெய்வதன் மூலமும் கல்வியின் இலக்கை உறுதிசெய்ய வேண்டியுள்ளது. கூடுதலாக, மாணவர்களிடம் சமூகநீதியையும், சமத்துவத்தையும், தோல்வியில் இருந்து மீள்வதையும் பழக வைக்கும் வேலையை ஆசிரியர் செய்ய முடியும்.

5. பள்ளி - சமூக இணைப்பு

மாணவர்களின் எதிர்காலத்தை வன்முறை யற்றதாக மாற்ற, கூடிவாழ்வதற்கான முன்னெடு ப்புகளை பெற்றோர்களிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். பெற்றோர்களுக்கு தீண்டாமை, பாலியல் சீண்டல்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு வழங்குதல். ஊருக்குள் மாணவர்கள் மத்தியில் காணப்படும் போதைப் பழக்கங்கள், சீட்டாடுதல், சீரழிக்கும் இணையக் காட்சிகள் போன்றவற்றிலிருந்து விடுபட மாற்று வழிகளை முன்வைப்பதற்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் முன்னெடுக்க வேண்டும். எழுத்தா ளர்கள், கல்வியாளர்கள், குழந்தை நல செயல்பா ட்டாளர்களைப் பள்ளியின் சிறப்பு விருந்தினர் களாக அடிக்கடி அழைத்து மாணவர்களோடும் பெற்றோர்களோடும் உரையாடச் செய்வதை முன்னெடுக்க வேண்டும்.

- உதயசங்கர், சாலை செல்வம்

கட்டுரையாளர்கள் : தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் -கலைஞர்கள் சங்கத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்