புதுதில்லி, பிப்.14- புதுதில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஏழு நாள் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் நீக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையில் அறிகுறிகள் தென்படும் பயணிகள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பாஸிட்டிவ் என்று முடிவு வந்தால் அவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். இது தவிர சர்வதேசப் பயணிகள் யாருக்கும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் கட்டாயம் இருக்காது. கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால் சர்வதேச விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் உடல்நலன் குறித்து தாங்களாகவே 14 நாட்கள் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.