states

img

முதலீடு வெளியேற்றத்தால் ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சி

புதுதில்லி, மார்ச் 4 - உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை காரணமாக, உலகளாவிய அளவில், வர்த்தகச்  சந்தைகளில் நிலையற்றத் தன்மை உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்திய சந்தைகளில், ஜனவரி மாதத்தின் மத்தியில் சுமார் 61 ஆயிரம் புள்ளிகளுடன் இருந்த சென்செக்ஸ் மதிப்பு  தற்போது 10 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள் ளது. பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அந்நிய நிதி முதலீட்டாளா்களின் (Foreign Portfolio Investment -FPI) கைவசம் உள்ள இந்திய பங்குகளின் மதிப்பு 2 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக ‘மார்னிங் ஸ்டார்’ (Morning star, Inc.) நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து  வருகிறது. குறிப்பாக, அவா்கள் பெரிய நிறுவனங்கள் மற்றும் மிட்-கேப் துறைகளைச் சோ்ந்த பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். 2021 டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது (அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான) காலாண்டில் இந்திய பங்குகளில் அந்நிய நிதி முதலீட்டு  (FPI) மதிப்பு 65,400 கோடி டாலராக (இந்திய மதிப்பில் ரூ.49.05 லட்சம் கோடி) சரிவடைந்தது. இது, முந்தைய இரண்டாவது (ஜூலை  முதல் ஆகஸ்ட் வரையிலான) காலாண்டில், 66,700 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2 சதவிகித சரிவைக் கண்டுள்ளது.  இவற்றின் காரணமாக, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக சரிந்துள்ளது. பிப்ரவரி 23-ஆம் தேதி டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாய் 63  காசுகளாக இருந்த நிலையில், அது மார்ச் 4-ஆம் தேதி 76 ரூபாய் 12 காசுகளாகி உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 1 ரூபாய் 50 காசுகள் அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.