திரிபுராவில் எதிர்க்கட்சியினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக, ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவை அளித்ததாக சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், “தேர்தல் ஆணையத்தை சந்தித்து திரிபுராவில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்து ஆதாரங்களுடன் புகார் மனுவை சமர்ப்பித்தோம். தேர்தல் ஆணைய குழு திரிபுராவுக்கு வருகை தந்தபோது, அம்மாநில முதன்மை தேர்தல் ஆணையர் சிறு வன்முறை கூட அனுமதிக்கப்படாது என்று கூறியிருந்தார். ஆனால், சிறிது நேரத்துக்குள் சிபிஎம் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகள் மீதும் பரவலான வன்முறைகள் ஏவப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஜனநாயக விரோத செயல்கள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.