states

img

காவிரி டெல்டாவையும் தென் மாவட்டங்களையும் இணைக்குமா ரயில்வே நிர்வாகம்?

மதுரை, மே 8- கடந்த சில ஆண்டுகளாக ரயில்வேத்துறை காவிரி பாசன பகுதிகளை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் பல பழைய வழித் தடங்களை மீண்டும் கொண்டுவரவும் இல்லை; புதிய வழித் தடங்களுக்கான திட்டமிடுதல் பணிகளையும் முறையாக மேற்கொள்ளவில்லை. முன்பு முக்கிய வழித் தடத்தில் மீட்டர் கேஜ் முறையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றம் செய்த போது சில ஆண்டுகள் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக பல ரயில் தடங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் ரயில்வே கட்டுமானப் பணிகள் முடிந்து மீண்டும் தொடர் வண்டிகள் இயங்கத் துவங்கிய போது,  மூடப்பட்ட பல ரயில்வே தடங்கள் மீண்டும் துவக்கப்படவில்லை.  குறிப்பாக மதுரையை சென்னையுடன் காவிரி பாசன மாவட்டங்கள் வாயிலாக இணைத்து வந்த “ஜனதா எக்ஸ்பிரஸ்” தற்போது வரை துவங்கப்படவில்லை. தென் மாவட்ட மக்கள் மற்றும் காவிரி பாசன மக்களின் தொடர் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து தற்போது வாரத்திற்கு ஒரு முறை, இரண்டு முறை என்று இயக்கப்பட்டு வந்த திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே தற்சமயம் தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன பகுதிகளின் இணைப்பு பாலமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வாரத்திற்கு ஒரு முறை என்று இயங்கி வரும் புதுச்சேரி-கன்னியாகுமரியை இணைக்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் தின ரயிலாக மாற்றப்படாமல் உள்ளது.

தற்போது வரை மதுரையில் இருந்து சென்னை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வாயிலாக திருச்சி வரை சென்று பின்னர் திருச்சியில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் வாயிலாக செல்லும் நடைமுறையே காலை நேரங்களில் காவிரி பாசனப் பகுதிகளை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் பாலமாக உள்ளது. மறுபுறம் மதிய நேரத்தில் மறு மார்க்கமாக சென்னை முதல் திருச்சி வரை காவிரி பாசன மாவட்டங்களை இணைக்கும் சோழன் எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு வரும் போது தென் மாவட்ட மக்கள் செல்ல வேறு இணைப்பு ரயில்கள் இல்லை. எனவே தென் மாவட்ட மக்கள் திருச்சியில் இருந்து பேருந்து வாயிலாகவே செல்ல வேண்டிய சூழல் பல்லாண்டுகளாக நிலவுகிறது. மேலும் சில மணி நேரம் காத்திருந்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வரலாம். ஆனால் திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு தினமும் இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) மற்றும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (16847)போன்ற ரயில்களில் மாற்றம் செய்தால் எளிதாக தென் மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் இணைப்பு சேவையை எளிதாக வழங்க முடியும். இதன் வாயிலாக லட்சக்கணக்கான ஏழை, எளிய நடுத்தர மக்கள் பொது போக்குவரத்தை நம்பியுள்ள சூழலில் அவர்களின் போக்குவரத்து தேவைகளை எளிதாக நிறைவு செய்வதாகவும் இருக்கும். மேலும் தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஒரு இணைப்பு பாலமாகவும் இப் புதிய ரயில் சேவை இருக்க வாய்ப்புள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் இதைப் பரிசீலிக்குமா?