சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும். ஓரே கட்டமாக நடைபெறும் இத்தேர்தலின் வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இது தொடர்பான வழக்கின் தீர்ப்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி மற்றும் அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர், 8,288 பேரூராட்சி உறுப்பினர், 3,468 நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.
பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் , வாக்குப்பதிவு காலை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் கரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்கலாம்.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ம் தேதி தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மனுதாக்கலுக்கான கடைசி பிப்ரவரி 4-ம் கடைசி நாள். வேட்புமனுக்களை பரிசீலனை பிப்ரவரி 5ம் தேதியும், வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 7-ம் தேதி கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும். அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும் என அட்டவனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மார்ச் 2ம் தேதி பதவியேற்பார். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தற்போது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.