states

திருநெல்வேலி பதிப்பு துவக்கவிழா பொதுக் கூட்டம்

செப்டம்பர் 
22, 2023 
மாலை 5 மணி

பாளையங்கோட்டை

சிறப்பிதழ் வெளியீடு

ஊடக உலகில் உண்மையின் பேரொளியாம், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் - தத்துவார்த்த ஆயுதமாம் தீக்கதிர் நாளிதழ் தனது வைரவிழா ஆண்டின் நிறைவையொட்டி, டிஜிட்டல் பதிப்பு உட்பட 6வது பதிப்பாக திருநெல்வேலி பதிப்பை செப்டம்பர் 22 அன்று பெருமிதத்துடனும், கம்பீரத்துடனும் துவக்குகிறது. பதிப்பு துவக்க விழா ஏற்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி  மாவட்டக்குழு மிகுந்த உற்சாகத்துடன் செய்து வருகிறது என மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.  பதிப்பு துவக்கவிழாவையொட்டி தீக்கதிர் சிறப்பிதழும் வெளியாகிறது. செப்டம்பர் 22 வெள்ளியன்று மாலை 5 மணியளவில் பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகில் நடைபெற உள்ள திருநெல்வேலி பதிப்பு துவக்கவிழா - பொதுக்கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு  உறுப்பினரும் பீப்பிள்ஸ் டெமாக்ரசி பத்திரிகையின் ஆசிரியருமான பிரகாஷ் காரத் முதல் பிரதியை வெளியிட்டு,  பதிப்பை துவக்கி வைக்கிறார்.

முதல் பிரதியை தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக் கொண்டு உரையாற்றுகிறார்.  தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், தீக்கதிர் திருநெல்வேலி பதிப்பின் பொறுப்பாளருமான கே.ஜி.பாஸ்கரன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், கேரள முதல்வரின் தனிச் செயலாளரும் தேசாபிமானி நாளிதழின் முன்னாள் தலைமைச் செய்தி ஆசிரியருமான பி.எம்.மனோஜ், கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முகமது, க.கனகராஜ், தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டி,  மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர்கள்  ஆர்.செல்லசுவாமி(கன்னியாகுமரி), க.ஸ்ரீராம்(திருநெல்வேலி),  கே.பி.ஆறுமுகம்(தூத்துக்குடி), உ.முத்துப்பாண்டியன் (தென்காசி) ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

கட்சியின் மூத்த தலைவர் வீ.பழனி, தீக்கதிர் டிஜிட்டல் மற்றும் கோவை பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன்,  மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.லீமாறோஸ், பி.கற்பகம், பி.பூமயில், தீக்கதிர் மதுரை பதிப்பு பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழுச் செயலாளர்கள், கட்சித் தோழர்கள் மற்றும் தீக்கதிர் நிர்வாகிகள், வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.  முன்னதாக செப்டம்பர் 22 காலை 10 மணியளவில் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு அலுவலகத்தில் அமைந்துள்ள தீக்கதிர் பதிப்பு அலுவலகத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைக்கிறார். 

சிறப்பிதழ்

திருநெல்வேலி பதிப்பு துவக்கவிழாவையொட்டி செப்டம்பர் 22 காலை தீக்கதிர் சிறப்பிதழ் வெளியாகிறது. இச்சிறப்பிதழில் தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்கள் உள்பட அரசியல் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள், மாநில, மாவட்டத் தலைவர்களின் சிறப்புக் கட்டுரைகள், வாழ்த்து விளம்பரங்கள் இடம்பெறுகின்றன.  இச்சிறப்பிதழுக்கு தீக்கதிர் வாசகர்கள், கட்சிக் குடும்பங்கள், கட்சியின் அனைத்து கிளைகள், இடைக்குழுக்கள்  மற்றும் ஆதரவாளர்கள் வாழ்த்து விளம்பரங்களை வாரி வழங்கி, திருநெல்வேலி பதிப்பு துவக்க விழாவை எழுச்சிமிக்கதாகவும் உற்சாகமிக்கதாகவும் மாற்றுவீர்; விழாவில் திரளாகப் பங்கேற்பீர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.