states

ஆகாய அனுபவம் - தனியார் துறை அம்பலம் - க.சுவாமிநாதன்

மோடி ஆட்சியின் கைங்கர்யம் விமானப் போக்குவரத்தில் அரசு நிறுவனமே இல்லாமல் செய்ததுதான். அரசின் கடிவாளம் அறுந்து போன விமான சேவைத் துறை தரும் பாடம் என்ன என்பதே இந்த கதை. அண்மைச் செய்தி. “ஆகாஷா” விமான நிறுவனம் கடந்த 72 மணி நேரத்தில் பிப்ரவரி 10, 12, 2024 தேதிகளில் 10 விமானங்களை ரத்து செய்துள்ளது. காரணம் வேடிக்கையானது. விமானிகள் நிறைய பேர் “சிக் லீவில்” சென்று விட்டார்கள் என்பதே. (தி இந்து 13.02.2024). அரசு நிறுவனங்கள் என்றாலே மோசம், நிர்வாகத் திறமை அற்றவை, வாடிக்கையாளர் சேவையில் அக்கறை காட்ட மாட்டார்கள் என்றெல்லாம் உயர் நடுத்தர வர்க்கத்தினரிடம் எண்ணங்கள் இருக்கும். அப்படியொரு கருத்தை அவர்கள் எல்லா இடங்களிலும் பேசுவார்கள். தனியார் மயத்திற்கு மக்களின் ஒப்புதலைப் பெற பயன்பட்ட முக்கியமான வாதம் இது. ஆனால் இப்போது அரசு நிறுவனமே இல்லாத துறையாக விமான சேவைத் துறை மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் அண்மைக் காலமாக விமான சேவை பற்றி வரும் செய்தி எல்லாம் நம்மை அதிர வைக்கிறது. உக்ரைன் போர், ஒடிசா ரயில் விபத்து  சமயங்களில் எல்லாம் விமானக் கட்டணங்கள் 3 மடங்கு 4 மடங்கு செங்குத்தாக உயர்ந்தன. மக்களின் இயலாமையை, துயரை  லாபமாக்குகிற குரூரம் வெளிப்பட்டது. ( டெக்கான் கிரானிகில் 23.02.2022 & டைம்ஸ் ஆப் இந்தியா 04.06.2023)

டாட்டாவுக்கு கை மாறிய ஏர் இந்தியாவில் ஒரு பயணி குடி போதையில் ஒரு சக பயணியாக இருந்த வயதான மூதாட்டி மீது நடுவானில் விமானம் பறக்கும் போதே சிறு நீர் கழித்து விட்டார். இதை முறைப்படி சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்திற்கு டாட்டா நிர்வாகம் தெரிவிக்கவில்லை. சமூக வலைத் தளங்களில் பலரும் கிழி கிழி என்று கிழித்த பின்புலத்தில் டாட்டா நிர்வாகத்தின் மீது ரூ. 30 லட்சம் தண்டத்தொகை விதிக்கப்பட்டது. (எகனாமிக் டைம்ஸ் 20.01.2023) இரண்டு மூன்று மாதங்களாக விமானங்கள் ஒழுங்காக நேரத்திற்கு கிளம்பவில்லை என்று ஏகப்பட்ட புகார்கள். தில்லி பனி மூட்டம் என்ற காரணம் கூறப்பட்டாலும் அதைத் தவிர வேறு காரணங்கள் இருந்தன என்பதே பயணிகளின் பகிர்வாக இருந்தது. பயணிகள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லா விட்டால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி ரத்து செய்து விடுகிறார்கள் என்பதே. “கோ பர்ஸ்ட்” விமான நிறுவனம் மே 3, 4, 5 - 2023 தேதிய விமான சேவைகளை கடன் பிரச்சனை காரணமாக ரத்து செய்வதாக மே 2 அன்று அறிவித்த போது ஆயிரக் கணக்கான பயணிகள் தவித்துப் போனார்கள். வேறு விமானத்தில் அவர்கள் கடைசி நிமிடத்தில் டிக்கெட் வாங்குவது என்றால் கட்டணம் பல மடங்கு இருக்கும். (எகனாமிக் டைம்ஸ் 02.05.2023) இன்னொரு பிரச்சனை “ஓவர் புக்கிங்”. இருக்கைகளுக்கு அதிகமாக முன் பதிவு செய்வது. போர்டிங் பாஸ் எடுத்த ஒரு மாணவர் உட்பட 3 பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் நவம்பர் 30, 2023 இல் பதிவிட்டார். (என்.டி.டி.வி டாட் காம் 30.11.2023). ஸ்பைஸ் ஜெட் தனது 91 ஜெட் விமானங்களில் 25  ஐ நிதி நெருக்கடி காரணமாக தரை இறக்கியது. (ராய்ட்டர்ஸ் 12.12.2023). இது ஒரு காலத்தில் இரண்டாவது பெரிய சந்தைப் பங்கை வைத்திருந்த நிறுவனம்.

தில்லி விமான நிலையத்தில் தாமதத்திற்கு எதிராக விமான விரிப்பிலேயே அமர்ந்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு விமானி பயணியால் தாக்கப்பட்டார். “வெட்கம் வெட்கம்” என்று கோஷம் போட்டனர். (எகனாமிக் டைம்ஸ் 16.01.2024) ஒரு இண்டிகோ டெல்லி - ராஞ்சி விமானம் கொல்கத்தா வழியாக திருப்பி விடப்பட்ட போது உணவு ஏற்பாடுகள் கூட செய்யப்படாமல் கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள் பயணிகள் அவதிப்பட்டனர் என்று புகார்கள் எழுந்தன. (எகனாமிக் டைம்ஸ் 20.01.2024). இப்படி நிறைய பொறுமல், குமுறல், கோபங்கள் செய்தி ஆகியுள்ளன. இந்த வரிசையில் அண்மைச் செய்திதான் ஆகாஷா விமானங்கள் ரத்து. இவை எல்லாம் ஒரு அரசு நிறுவனத்தில் நடந்திருந்தால் எவ்வளவு கூச்சல் எழுந்திருக்கும். அரசு நிறுவனம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று பல அறிவு ஜீவிகள் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருப்பார்கள். இந்த நிலைமைக்கு என்னென்ன காரணம்? ஒன்று, தனியார்களுக்கு லாபம் முக்கியம். அதுவும் உடனடி லாபம். அதற்காக அவர்கள் எந்த தார்மீக எல்லையையும் மீறுவார்கள். மக்களின் துயரம் கூட அவர்களுக்கு வணிகக் களத்தில் வரம். இரண்டாவது, ஒரு அரசு நிறுவனம் களத்தில் இருந்தால் விலைக் கட்டுப்பாடு என்ற கடிவாளம் இருக்கும். அவசர காலங்களில் லாபம் பார்க்காமல் அரசு விமானங்கள் பறக்கும். மக்களை காக்கும். கோவிட் காலத்தில் “வந்தே பாரத்” என்று ஏர் இந்தியா செயல்பட்டது. அப்போது அது அரசு நிறுவனம். ஆனால் ஒரே அரசு நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா இன்று டாட்டா கைகளில். மூன்றாவது, விமானப் போக்குவரத்து துறையில் இரண்டு நிறுவனங்கள் ஏகபோக மாக சந்தையில் கோலோச்சுகின்றன. இண்டிகோ சந்தைப் பங்கு 63 சதவீதம்,  டாட்டா கம்பெனிகள் எல்லாம் சேர்ந்து (ஏர் இந்தியா, ஏர் ஏசியா, விஸ்தாரா) 25 சதவீதம். மொத்தம் இந்த இரண்டு கம்பெனிகள் சேர்ந்து 88 சதவீத சந்தைப் பங்கு. ஆகவே குச்சி குரங்கு கைக்கு போய் விட்டது. இதுதான் ஆகாஷா தரும் பாடம். தனியார் மய அவலங்கள் அம்பலம்.