டோக்கியோ, ஜூலை 22- எந்தவித கணக்கும் எழுதாமல் ஜப்பான் அமைச்சரவை ஒவ்வொரு நாளும் 37 லட்சம் ஜப்பானிய யென் மதிப்பிலான பணத்தை செல வழித்துக் கொண்டிருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பல்வேறு தகவல்களை சேகரித்த ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதியன்று தற்போதைய பிரதமர் கிஷிடா தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண் டது. அப்போதிருந்து நடப்பாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் எந்தவிதக் கணக்கும் வைத்துக் கொள்ளாமல் 67 கோடி ஜப்பானிய யென் செலவழிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் அனைத்துமே “கொள்கைகளை முன்னிறுத்துவதற்கான நிதி” என்ற பெயரில் வாரி வழங்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் அரசின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மட்சுனோ ஹிரோகாசுக்கு மட்டும்தான் இந்த நிதி யாருக்குத் தரப்பட்டுள்ளது என்பது தெரியும். ஜப்பானின் அர சியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையான தகவல் பெறும் உரிமை விதியைப் பயன்படுத்தி ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நிதி தொடர்பாக விபரங்களைக் கோரிப் பெற்றிருக்கிறது. ஜப்பானின் குறைந்தபட்ச ஊதியம் என்பது சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 930 ஜப்பானிய யென் ஆகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என்று, ஒருவர் ஆண்டுக்கு 300 நாட்கள் பணியாற்றினால் அவருக்கு 24 லட்சம் யென் ஊதியமாகக் கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு இந்தத் தொழிலாளர் பெறும் ஊதியத்தை விட, எந்தவிதக் கணக்கே இல்லாமல் ஜப்பான் அமைச்சரவை மேற்கொள்ளும் ஒரு நாள் செலவு அதிகமாக இருக்கிறது என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.