தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தொன்றை ஏற்பாடு செய்து அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதன்முதலாக ஆளுநரின் அழைப்பை நிராகரித்தார். 13.4.2022 அன்று அவர் விடுத்த அறிக்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் ஆளுநர் தொடர்ந்து நிராகரித்து வருவதை சுட்டிக்காட்டியதோடு, நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க மறுப்பது, துணை வேந்தர் நியமன சர்ச்சை இந்தியாவில் பன்மைத்தன்மையை நிராகரிக்கும் வகையில் ஆளுநர் பேசி வருவது போன்ற காரணங்களால் இந்த தேநீர் விருந்தில் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதன் உச்சமாக தமிழக முதல்வரும், ஆளுநரின் அழைப்பை நிராகரிப்பதாக அறிவித்து கடிதம் எழுதினார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி இருமுறை சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோதும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஒன்றிய அரசிற்கு ஆளுநர் அனுப்பி வைக்காதது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக ஆளுநரை நேரில் சென்று தாம் வலியுறுத்தியதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். எங்கள் சமூகம் மற்றும் சட்டப் பேரவையின் ஒட்டுமொத்த கருத்துக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்கிறபோது நாங்கள் அந்த முடிவை எடுத்தோம் என்று முதல்வர் குறிப்பிட்டார்.
திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் விருந்துக்கு வரவில்லை என்றால் என்ன நாங்கள் பங்கேற்போம் என்று அதிமுகவின் ஜெயக்குமார் முதல் ஆளாக பந்தியில் சென்று அமர்ந்தார். தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையில் நடைபெறும் விருந்தை புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றார் அவர். இவர்கள் ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு விலக்கு கோரி அனுப்பப்பட்ட மசோதாவை அப்போதிருந்த ஆளுநர் கண்டு கொள்ளவேயில்லை. ஆனால் அப்போதும் இவர்கள் கொஞ்சமும் கூச்சப்படாமல் மிக்சரும், தேநீரும் சாப்பிட்டு ஆளுநரை கவுரவித்தார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தில் அப்போதிருந்த ஆளுநர் சென்னாரெட்டி அளித்த விருந்தை புறக்கணித்தது மட்டுமல்ல, அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் அது வேறு, இது வேறு என்று வியாக்கியானம் செய்கிறார் ஜெயக்குமார்.
அரைகுறை அறிவாளி அண்ணாமலை ஆளுநருக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால் டீச் செலவு மிச்சம் என்று கூறினார். விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் இதுகுறித்து கூறுகையில், பெட்ரோல், டீசல் விற்கும் நிலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் செலவு மிச்சம் என எங்களாலும் கூற முடியும் என்று பதிலளித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முறை கூறினார். எனவே பாஜகவி னருக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து எப்போதும் கவலையில்லை.
மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆளூர் ஷாநவாஸ் கருத்தை மேற்கோள் காட்டி ‘இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவது இல்லை, தமிழ்மக்களின் பணம் செலவிடப்படு கிறது. சொன்னது போல சேமிப்பதில் இருந்ததா இல்லையா என்பதை அறிய பில் வரும் வரை காத்திருப்போம்’ என்று சுவைபடச் சொன்னார். அதாவது ஆளுநர் மாளிகையில் ஜெயக்குமார் வகையறாவும், அண்ணாமலை வகையறாவும் குடிக்கும் டீச் செலவும் தமிழ் மக்களின் தலையில்தான் விடியும் என்றார் அவர். ஆளுநரின் விருந்தை நிராகரித்த தமிழக முதல்வர், விளிம்புநிலை மக்களான நரிக்குறவ மக்களின் வீடுகளுக்குச் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு அவர்களுடைய வீட்டில் மகிழ்வோடு விருந்து உண்டு வந்ததும் ஊடகங்களில் பேசு பொருளானது.
இதனிடையே ஆளுநரின் அதிகார வரம்பு குறித்தும் ஒன்றிய அரசின் அதிகாரம் குறித்தும் நடைபெறும் விவாதத்தில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா உள்ளே நுழைந்து, ஒன்றிய அரசின் அதிகார வரம்பு, எல்லை ஆகியவை என்ன என்பதை திமுக உணர்ந்த ஆண்டுகள் 1976 மற்றும் 1991 ஆகியவைகளாகும் என்ற டிவிட் செய்துள்ளார். அதாவது 1976லும், 1991லும் ஒன்றிய அரசினால் மாநில திமுக அரசு ஜனநாயக விரோதமாக கலைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மிரட்டுகி றார். எவ்வளவு வன்மம் பாருங்கள். நாங்கள் நினைத்தால் ஆளுநரை கொண்டு ஆட்சியை கலைக்கத் தயங்க மாட்டோம் என்பதுதான் எச்.ராஜாவின் வக்கிர மிரட்டல்.
ஆனால் ஒன்றிய அரசுகள் நினைத்தபோதெல்லாம் அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைக்க முடியாது என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டுள்ளதை எச்.ராஜா மறந்துவிட்டார். 1959ஆம் ஆண்டு கேரளத்தில் நடைபெற்ற தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான ஆட்சியை அன்றைய ஒன்றிய அரசு கலைத்தது. அதன் பிறகு தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சிகள் உட்பட பலமுறை மாநில அரசுகள் ஒன்றிய அரசுகளால் கலைக்கப்பட்டன. இந்த வரிசையில் 1989ஆம் ஆண்டு கர்நாடகத்தில் எஸ்.ஆர்.பொம்மை தலைமையிலான அரசை அன்றைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் கலைத்தார்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவர் செய்யும் பரிந்துரையை ஆராயும் அதிகாரம் நீதிமன்றத் திற்கு உண்டு என்று சொன்னதோடு தேவையானால் கலைக்கப்பட்ட மாநில அரசை மீண்டும் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட முடியும் என உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்ததை எச்.ராஜாவுக்கு நினைவு படுத்துகிறோம். ஆளுநரை பயன்படுத்தி எந்தவொரு மாநில அரசையும் கலைப்போம் என எச்.ராஜா வகையறா பூச்சாண்டி காட்ட முடியாது.
தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் இடையூறு செய்து வருகிறார்கள். இதை எதிர்த்து மாநில அரசுகள் அணி சேர வேண்டியுள்ளது. இந்தப் பின்னணியில் ஆளுநரின் தேநீர் விருந்தை மாநில திமுக அரசு புறக்கணித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. திமுகவின் முரசொலி ஏடு, ஆளுநர் தன்னுடைய கடமையைக் கூட சரிவரச் செய்யாமல் அவசியமற்ற அரசியல் செய்து வருகிறார் என்று தலையங்கத்தில் சாடியுள்ளதோடு, தமிழக பாஜகவின் தலைமைப் பொறுப்பை தானே கவனிக்கலாம் என்று அவர் நினைத்து விட்டாரா எனத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
பல சமயங்களில் ஆர்.என்.ரவி பேசுவது, அண்ணாமலைக்கு டப்பிங் கொடுப்பது போலவே உள்ளது. இருவருக்குமான குரல் பயிற்சியை ஆர்எஸ்எஸ்தான் வழங்கியிருக்கிறது என்பது பல சமயங்களில் நிரூபணமாகியிருக்கிறது. மாநில உரிமைகளைப் பறிப்பதையும், மாநில மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதையும் நிறுத்தாவிட்டால் தமிழ்நாடு வழங்குகிற தேநீர் கூட சூடாகத்தான் இருக்கும் என்பதை ஆளுநரும், அவரது அறிவிக்கப்படாத ஒலி பெருக்கிகளும் புரிந்து கொள்வது நல்லது.