தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி கூறிய இலங்கை பிரதமர்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகை யில் தமிழக அரசு சார்பில் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பொருட் களை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் ஒப்படைத்தார். இதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உட்பட ரூ. 200 கோடி மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்தடைந்தன. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆதரவு அளித்த இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் முதலீடு: சிங்கப்பூர் முதலிடம்!
2021-22 நிதியாண்டில், இந்தியா 8 ஆயிரத்து 357 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018 பிப்ரவரி முதல் 2020 பிப்ரவரி வரையில் அந்நிய நேரடி முதலீடு 14 ஆயிரத்து 110 கோடி டாலராக இருந்தது. 2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரையிலான காலத்தில் அது 17 ஆயிரத்து 184 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்குள் வந்த மொத்த முதலீட்டில் சிங்கப்பூரின் பங்கு 27 சதவிகிதம் ஆகும். இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் (18 சதவிகிதம்). மூன்றாம் இடத்தில் மொரிஷியஸூம் (16 சதவிகிதம்) உள்ளன.
காற்றாலை மின்சாரம்: உலகளவில் தமிழ்நாடு முன்னிலை!
காற்றாலை மின் உற்பத்தியில், தமிழ்நாடு மாநிலம் உலக நாடுகளுடன் போட்டி போடு வதாக, உலக பொருளாதார மன்ற(World Economic Forum) அறிக்கை குறிப்பிட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் (342 ஜிகாவாட்) உள்ளது. அமெரிக்கா இரண்டா மிடத்தில் (139 ஜிகா வாட்) உள்ளது. ஜெர்மனி மூன்றாவது இடத்தில் (60 ஜிகா வாட்) இருக்கிறது. 42 ஜிகா வாட் மின்னுற்பத்தியுடன் இந்தியா 4-ஆம் இடம் வகிக்கிறது. இதில், அதிகபட்ச காற்றாலை மின்சாரம் தமிழ்நாடு மூலமே கிடைக்கிறது. ஆஸ்திரேலியா, மெக்சிகோ நாடுகளைக் காட்டிலும் அதிகமான காற்றாலை மின்சாரம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது என்று உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!
ஜம்மு - காஷ்மீரில் திங்கட்கிழமையன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. திங்களன்று காலை 10.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அட்சரேகை 34.43 டிகிரி வடக்கு மற்றும் தீர்க்கரேகை 75.03 டிகிரியாக இருந்தது. இது பூமியின் 50 எம்.எஸ் ஆழத்தில் ஏற்பட்டது மற்றும் அதன் மையம் பள்ளத்தாக்கின் பந்திபோரா பகுதியிலிருந்தது என்று பேரிடர் மேலாண்மைத்துறை கூறியுள்ளது. காஷ்மீர் அதிக உயர்திறன் கொண்ட நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. கடந்த 2005-இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
வெறுப்பு அரசியலில் குஜராத், உ.பி.யை முந்தும் அசாம்
“இந்தியாவை குஜராத் மாடல் ஆக்குவதா? அல்லது உத்தரபிரதேச மாடல் ஆக்குவதா? என போட்டி நிலவி வருகிறது. அந்த வரிசையில் இதையெல்லாம் விட அசாம் முதல்வர் முன்னிலை யில் உள்ளார். இஸ்லாமிய மதத்தினரை அதிகம் துன்புறுத்துவது யார் என்பதில் இந்த மாநில முதல்வர்களிடையே போட்டி நிலவுகிறது. இஸ்லாமியர் என நினைத்து இந்து மதத்தை சேர்ந்தவர் மத்தியபிரதேசத்தில் அடித்துக் கொல்லப்பட்டதை நீங்கள் பார்த்தீர்கள். நாட்டின் அஸ்திவாரத்தையே அசைப்பது பற்றி அவர்கள் (பாஜக) பேசுகின்றனர். நாடு உருவான மதச்சார்பின்மை, நாட்டை இயக்கும் அரசியலமைப்பை பாஜக அசைக்கிறது” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் பேசியதைத்தான் அன்று நான் பேசினேன்!
“நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு உள்ளது” என்று பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த கருத்தை வரவேற்பதாக நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். “இந்தி இனி நமது தேசிய மொழி அல்ல! என கூறி நான் கல கத்தையோ விவாதத்தையோ ஏற்படுத்தவில்லை. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேச வில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என பிரதமர் பேசிய கருத்தைத் தான் நானும் அன்றைக்கு முன் வைத்தேன்” என்று கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு எண் எங்கே? சீமானுக்கு கிடுக்கிப்பிடி!
“சீமான் தனது வீட்டில் மின் தடை ஏற்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் வீட்டு மின் இணைப்பு எண் குறித்து இரண்டு முறை கேட்டிருந்தேன். இதுவரை பதில் அளிக்கவில்லை. மின் இணைப்பு எண் என்ன? என்று சீமான் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி யுள்ளார். “மின் விநியோகத்தில் தற்போது எந்த பாதிப்பும் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் கொடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது” என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
3 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு?
பெட்ரோல் மீதான உற்பத்தி வரியில் லிட்டருக்கு ரூ. 8, டீசல் மீதான உற்பத்தி வரியில் லிட்ட ருக்கு ரூ. 6 குறைப்பதாக ஒன்றிய அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே பெட்ரோல் மீதான வாட் வரியில் 2 ரூபாய் 41 காசுகளும், டீசலுக்கான வாட் வரியில் 1 ரூபாய் 36 காசுகளும் குறைப்பதாக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்தது. கேரளத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசும் பெட்ரோல் மீதான வாட் வரியில் 2 ரூபாய் 8 காசுகள் டீசல் வரியில் 1 ரூபாய் 44 காசுகள் குறைத்தது. தற்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசும் வாட் வரியைக் குறைத்துள்ளது.
வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு!
ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள இந்து தெய்வங்களை பூஜை செய்வதற்கு அனு மதிக்கக் கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை மாவட்ட நீதி மன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நீதி மன்றத்தில் இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. 45 நிமிடங்களுக்கு விசாரணை நடை பெற்றது. 4 மனுதாரர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உட்பட வெறும் 23 பேர் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், விசாரணை முடி வடைந்த நிலையில், தீர்ப்பு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக மக்களுக்கு இலங்கை எம்.பி. நன்றி
சென்னை, மே 23- காலம் அறிந்து உதவிய தமிழக உடன் பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 18 ஆம் தேதி மாநில அரசின் சார்பில் 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சரக்குக் கப்பலை சென்னை துறைமுகத்திலிருந்து இலங் கைக்கு அனுப்பி வைத்தார். இலங்கை வாழ் மக்களுக்கு உத விடும் வகையில் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட அரிசி, ஆவின் பால் பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அடங்கிய கப்பல் நேற்று இலங்கைக்கு சென்றடைந்தது. இந்நிலையில் இந்த உதவி களுக்கு இலங்கை எம்பி மனோ.கணே சன் தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரி வித்துள்ளார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை,மே 23- சென்னையிலுள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 22) நள்ளிரவு 11.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை காவலர்கள் இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித் தனர். பின்னர், ஆய்வாளர் முரளி தலைமையில் காவலர்கள் ஆழ்வார் பேட்டையிலுள்ள முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சந்தேகப்படும் படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையில், மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் அந்தோணி ராஜ். தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த ரயில்வே ஊழியர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தங்கம் விலை அதிகரிப்பு
சென்னை, மே 23- தங்கம் விலை சமீப காலமாக ஏற்ற இறக்க த்துடனேயே காணப்படுகிறது. கடந்த வாரம் 16 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,824-க்கு விற்றது. அடுத்த நாள் மே 17-ஆம் தேதி அது ரூபாய் 38 ஆயிரத்தை தாண்டி யது. அதன்பிறகு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 21 ஆம் தேதி ரூ.38,536- க்கும் விற்கப்பட்டது. மே 22 அன்றும் அதே விலையில் நீடித்தது.இந்த நிலையில் திங்களன்று (மே23) தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சவரனுக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.14 அதிகரித்து ரூ.4,831-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் அதிக ரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90-க்கு விற்கப்பட்டது. திங்க ளன்று (மே23) ஒரு கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.66.10-க்கு விற்கப்படுகிறது.