states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டடம் நவம்பர் 26 அன்று திறப்பு?

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில்  எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்கு, உணவுக் கூடங்கள் இடம்பெறுகின்றன. இதற்கான கட்டுமானத்தை 2022 அக்டோபர் இறுதியில் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டடம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப்பில் மீண்டும் 420 பேருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பாடகர்களில் ஒருவராக இருந்தவர் சித்து மூஸ்  வாலா. 28 வயதான இவர், கடந்த மே 29 அன்று ஜீப்பில் சென்று கொண்டிருந்த போது,  அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சித்து மூஸ் வாலா உள்ளிட்ட 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைப் பஞ்சாப் அரசு குறைத்துக் கொண்ட பின்னணியில் இந்த படுகொலை நிகழ்ந்தது. இதனால் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. இதையடுத்து, பாதுகாப்பு குறைத்துக் கொள்ளப்பட்டவர்களில் 420 பேருக்கு மீண்டும் பாதுகாப்பை அதிகப்படுத்த ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.

பாஜகவில் கரைந்தார் ஹர்திக் படேல்

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த, குஜராத் மாநில செயல் தலைவர் ஹார்திக் படேல் கடந்த மே 19 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். “நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் தடையாக உள்ளது” என்றும் ஒன்றிய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், “இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்கப்போகிறேன்; பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்காக உழைக்கப் போகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்ட கையோடு, வியாழனன்று குஜராத்தில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஹர்திக் படேல் பாஜகவில் இணைந்துள்ளார்.

சோனியாகாந்திக்கு கொரோனா பாதிப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து, சோனியா காந்தி, வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சோனியா காந்தி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சோனியா வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், லக்னோவுக்கு சென்றுகொண்டிருந்த அவரது மகள் பிரியங்கா காந்தி, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, தில்லி திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவி கிடைக்காததால் பொன்னையன் குழப்புகிறாராம்!

“தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு, அந்த இடத்திற்கு பாஜக வரப்பார்க்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், “மாநிலங்க ளவை எம்.பி. பதவி கிடைக்காததால் பொன்னையன் அதிருப்தியில் உள்ளார். அதனால்தான் கூட்ட ணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்” என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கூறியுள்ளார். “பொன்னையனை தூண்டி விட்டது யார்? அதாவது திமுக-வுடன் அதிமுக கைகுலுக்கப் போகிறதா? எம்ஜிஆருக்கும், ஜெ.ஜெ. அம்மாவுக்கும் எதிராக செல்லப் போகிறதா?” என பாஜகவில் அண்மையில் பதவி பறிப்புக்கு உள்ளான நடிகை காயத்ரி ரகுராமும் கேள்வி எழுப்பி யுள்ளார்.

எங்கள் கட்சியினர் அனைவரையுமே கைது செய்யுங்கள்...

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினைத் தொடர்ந்து, துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவையும் விரைவில் கைது செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பி னர்களையும் சிறையில் அடைத்து, அனைத்து ஒன்றிய அமைப்புகளையும் வைத்து ஒரே நேரத்தில் அனைத்து விசாரணைகளையும் மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவுக்கும் இருமொழி கொள்கைதான்; நயினார் பேட்டி!

“தமிழகத்தில் பாஜகவின் நிலைபாடும் இருமொழி கொள்கைதான்” என அக்கட்சியின் சட்ட மன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே இங்கு பாஜக வளர முடியும்” என அதிமுக மூத்தத் தலைவர் சி. பொன்னையன் விமர்சித்து இருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நயினார் நாகேந்தி ரன் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழி கொள்கைதான் பாஜக-வின் நிலைபாடு. மேலும், இருமொழிக் கொள்கை முடிவுதான் தமிழகத்தில் சரியாகவும் இருக்கும்” என்று நயினார் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கட்சியல்ல; அது ஒரு பிணந்தின்னி கழுகு!

“பாஜக ஒன்றுக்கும் உதவாத கட்சி. நாடு இதுவரை பார்த்ததில் மிகவும் திறமையற்ற கட்சி பாஜக. யாரேனும் உயிரிழப்பார்கள் அப்போதுதான் அந்த உடலை சாப்பிட முடியும் என்று காத்தி ருக்கும் பிணந்தின்னி கழுகு போன்றது பாஜக! நாட்டின் நலனுக்காக அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பன்குரா மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் கட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

மாநிலங்களவை தேவையா? மணீஷ் திவாரி கேள்வி!

“என்னுடைய தனிப்பட்ட கருத்து, மாநிலங்களவை எதற்காக அமைக்கப்பட்டதோ, அந்த செயல்  பாடுகளை நிறைவேற்றுவதை நிறுத்தி விட்டது. மாநிலங்களவை தற்போது வாகன நிறுத்து மிடமாக மாறியுள்ளது. நாட்டுக்கு இப்போது மாநிலங்களவை தேவையா இல்லையா? என்பதை ஆராய வேண்டும்” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார். மேலும், “பல பத்தாண்டுகளாகவே மாநிலங்களவை அது தொடங்கப்பட்ட தன்- அதாவது மாநிலங்களின் உரிமைகளை வென்றெடுப்பது என்ற முக்கிய நோக்கத்தை நிறை வேற்றத் தவறிவிட்டது” என்று கூறியிருக்கும் அவர், “இந்திய கூட்டாட்சிக்கு ஏன் இரண்டாவது அவை தேவைப்படுகிறது? அது இல்லாமல் இந்தியா செயல்பட முடியாதா? என்ற கேள்விகளை யும் எழுப்பியுள்ளார்.

பாமகவுக்கு களத்தில் எதிரி பாஜக-தான்; ராமதாஸ் பேச்சு?

“பாமக-வை பொறுத்தவரை, களத்தில் பாஜக-தான் எதிரி. வன்னியர் சங்கமும், பாமக-வும்  உள்ள கிராமங்களில் இளைஞர்கள் ஆர்எஸ்எஸ் - பாஜகவில் சேருவதைத் தடுக்க, பாமக நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். இளைஞர்களை ஈர்க்கும் செயல் திட்டங்களை முன்வைக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.