சென்னை, மார்ச் 6 - நூறு நாள் வேலை திட்டத்தினை ஒழித்துக் கட்டும் ஒன்றிய அரசின் உத்தரவு மீது, தமிழ்நாடு அரசு தலையிட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் கடிதம் ஒன்றையும் எழுதி யுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தின் போது இடதுசாரி கட்சி களின் வற்புறுத்தலின் பேரிலும், ‘குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தின்’ முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான கிராமப்புறத்தில் வசிக்கும் 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் வேலை வழங்கி டும் வகையில் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம்” நிறை வேற்றப்பட்டு நாடு முழுவதும் செயல்படு த்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
சரிபாதியாக குறைந்த நூறுநாள் வேலைகள்
2014-ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப் பேற்ற மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு இத்திட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நிபந்தனை களை விதித்தும், சட்டங்களை திருத்தி யும், நிதி ஒதுக்கீட்டைப் படிப்படியாக வெட்டிச் சுறுக்கியும் இத்திட்டத்தை சிதைத்து வருகிறது. இதனால் கிராமப்புற ஏழைகள் இந்த வேலைத் திட்டத்தில் கிடைத்து வந்த வேலை நாட்கள் தற்போது சரிபாதியாக குறைந்து வருமானம் இழந்து தவித்து வருகின்றனர்.
கூலி வழங்க முடியாது என சுற்றறிக்கை
இதன் தொடர்ச்சியாக தற்போது அதிக அளவிலான தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் ஏரி, வாய்க்கால், குளம், தூர்வாருதல் போன்ற மண் சார்ந்த வேலை களை ரத்து செய்துவிட்டு, ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கும் விதமாக பொருட்கள் செலவினம் சார்ந்த (material component) பணிகளை மட்டுமே இப்போது செய்திட வேண்டுமென ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறையால் அனைத்து ஊராட்சிகளுக்கும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. ஏரி, வாய்க்கால், குளம் தூர்வாருதல் போன்ற வேலை களை செய்தால் கூலி வழங்க இயலாது எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வேலையிழந்த 70 லட்சம் தொழிலாளர்கள்
ஏற்கெனவே, ஆதார் இணைப்புடன் ஊதிய பரிவர்த்தனை என்ற திட்டத்தால் தமி ழகத்தில் சுமார் 70 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். விவசாய வேலை கள் இயந்திரமயமாகி உள்ள பின்னணியில் 80 சதவிகித பெண் தொழிலாளர்கள் வேலை வருமானம் இழந்து சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர். கோடைக் காலத்தில் விவசாய வேலைகள் ஏதும் இல்லாத காலத்தில் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மோசமான வறுமை மற்றும் பசி - பட்டினியால் வாடும் நிலைமை உள்ளது.
அதிருப்தியை உருவாக்க மோடி அரசு கபடநாடகம்
இந்த சூழலில் ஒன்றிய அரசின் இதுபோன்ற மோசமான நிபந்தனைகளால் இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து, தமிழ்நாடு அரசின் மீது மக்களின் அதிருப்தியை உருவாக்கிட கபட நாடகத்தை அரங்கேற்றுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தி மண் சார்ந்த நீர் நிலைகளில் பெருமளவு தொழிலாளர்கள் பங்கேற்கும் அளவில் வேலை நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்து இந்த வேலையை நம்பி வாழும் கிராமப்புற ஏழை, எளிய மக்களை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கே. பால கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.