states

ஸ்டான் சுவாமிக்கு எதிரான என்ஐஏ ஆவணங்கள் போலியானவை; ஹேக்கர்கள் மூலமாக மடிக்கணினிக்குள் திணிக்கப்பட்டவை!

புதுதில்லி, டிச. 14 - பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கு, மாவோயிஸ்டு களுடன் சேர்ந்து சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, 83 வயது பாதிரியார் ஸ்டான் சுவாமி, ஜாமீன் கூட வழங்கப் படாமல் சிறைக் கொட்டடியிலேயே உயிரை விடும் கொடுமைக்குத் தள்ளப் பட்டார். இந்த சம்பவம் நடந்து ஆண்டு கள் இரண்டும் உருண்டோடி விட்டன.  இந்நிலையில், பாதிரியார் ஸ்டான்  சுவாமிக்கு எதிரான ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், அவரை வழக்கில் சிக்க வைப்பதற்காக, யாரோ சிலர் மடிக்கணினியை ஹேக் செய்து, அதில் ஸ்டான் ஸ்வாமியை பயங்கரவாதியாக காட்டும் ஆவணங் களை புகுத்தி இருக்கின்றனர் என்று கண்டறியப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பாஸ்டனைச் தலைமையமாகக் கொண்ட ‘ஆர்சி னல் கன்சல்டிங்’ (Arsenal Consulting) என்ற தடயவியல் நிறுவனத்தின் ஆய்வில் இந்த உண்மைகள் தற் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பாதிரியார் ஸ்டான் சுவாமி, தமிழ் நாட்டின் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். எனினும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார். இந்நிலையில்தான் பாதிரியார் ஸ்டான் சுவாமியை பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோ பர் 8-ஆம் தேதி கைது செய்து சிறை யில் அடைத்தது. பீமா கோரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஸ்டான் சுவாமியுடன், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லவ்கா, கவிஞர் வரவரராவ், சுதா பரத்வாஜ், கன்சால்வஸ் உள்ளிட்ட மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.  கணினிகளில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து ஸ்டான் சுவாமி உள்ளிட்டோர் சதிசெய்தனர் என புதிய குற்றச்சாட்டும் சுமத்தப் பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப் பட்டபோது ஸ்டான் சுவாமிக்கு வயது 83.

அப்போது, “பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடியதை தவிர  நான் என்ன தவறு செய்தேன்?” என்று  ஸ்டான் சுவாமி கேள்வி எழுப்பினார். தன்னை விடுதலை செய்ய வேண்டு மென நீதிமன்றத்தில் போராடினார். ஆனால், ஜாமீன் கூட அவருக்கு வழங்கப்படவில்லை. ஸ்டான் சுவாமி, பார்கின்சன் என்னும் பக்கவாத நோயால் மிகவும் மோசமான முறை யில் பாதிக்கப்பட்டிருந்தார். ஆயினும், திரவ உணவை உறிஞ்சிக் குடிப்பதற் கான உறிஞ்சு குழல் மற்றும் உறிஞ்சு குவளை கூட சிறை நிர்வாகத்தால் அவ ருக்கு வழங்கப்படவில்லை. மருத்துவ வசதிகளும் செய்து தரப்படவில்லை. மனித உரிமை ஆணையம், மும்பை உயர் நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே, மிகத் தாமதமாக தனியார் மருத்துவமனையில் ஸ்டான் சுவாமி சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி 2021-ஆம் ஆண்டு ஜூலை  5-ஆம் தேதி அதிகாலை ஸ்டான் சுவாமி யின் உயிர் பிரிந்தது. இது நாடு  முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. “இது இயற்கையான மரணம் கிடையாது. இது ஒரு புனிதமான ஆத்மா  மீது நடத்தப்பட்ட நிறுவனக் கொலை (Institutional Murder)” என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஐக்கிய நாடு கள் அவையும் கூட தனது கண்டனத் தைப் பதிவு செய்தது. இவை அனைத்தும் நடந்து சுமார் 2 ஆண்டுகள் ஆகப் போகிறது.

இந்நிலையில்தான், ஸ்டான் சுவாமி மீது இதுவரை என்ஐஏ சுமத்திய குற்றச் சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.  ஸ்டான் சுவாமியின் வழக்கறிஞர்கள், அவர் பயன்படுத்திய லேப்டாப்பை நீதிமன்றத் தின் அனுமதியுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் செயல்படும் ‘ஆர்சி னல் கன்சல்டிங்’ (Arsenal Consulting) என்ற தடயவியல் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த நிறுவனம் அவரது லேப்டாப்பை ஆய்வு செய்து தனது இறுதி அறிக்கையை தற்போது அளித்துள்ளது. அதில், ஸ்டான் சுவாமியின் லேப்- டாப்பில் என்ஐஏ அதிகாரிகள் கண்டெ டுத்த மாவோயிஸ்ட் தொடர்புடைய 44 ஆவணங்களும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டு மல்லாமல், ஹேக்கர்களால் ஸ்டான் சுவாமிக்கு தெரியாமலேயே அந்த ஆவணங்கள் அவரது லேப்டாப்பில் புகுத்தப்பட்டிருப்பதையும் ஆதாரப் பூர்வமாக ‘ஆர்சினல் கன்சல்டிங்’ நிறு வனம் நிரூபித்துள்ளது. மேலும், அந்த  ஆவணங்களை ஸ்டான் சுவாமி ஒருமுறை கூட திறந்து பார்க்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.  இந்த ஆவணங்களை கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் பல முறை அவரது,  மடிக்கணினிக்குள் ஹேக்கர்கள் புகுத்தி யுள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது, ஸ்டான் சுவாமி போலீஸ் விசார ணைக்கு உள்ளாவார் அல்லது உள்ளாக வேண்டும் என்பதை எதிர் பார்த்தே ஹேக்கர்கள் வேலையில் ஈடு பட்டுள்ளனர் என்றும் ‘ஆர்சினல்’ தடய வியல் நிறுவனம் கூறியுள்ளது. எனி னும், அந்த ஹேக்கர்கள் இந்திய  அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர் களா? என்ற யூகக் கருத்துகளுக்கு பதி லளிக்கவில்லை.

இதன்மூலமாக குற்றமே செய்யா மல் தண்டனைக்கு உள்ளாகி உயிரை யும் விட்ட பிறகு, ஸ்டான் சுவாமி தற் போது குற்றமற்றவர் என்பது நிரூபண மான கொடுமை அரங்கேறியுள்ளது. ஸ்டான் சுவாமியோடு சேர்த்து கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த ரோனா வில்சனின் மடிக்கணினி யிலும், இதேபோல ஹேக் செய்து, கடிதங்கள் பதிவேற்றப்பட்டதை ‘ஆர்சினல் கன்சல்டிங்’ அமைப்பு, கடந்த 2021 பிப்ரவரியில் கண்டறிந்து கூறியது குறிப்பிடத்தக்கது. கணினி-யில் வில்சனின் விசை அழுத்தங்கள், கடவுச் சொற்கள் மற்றும் உலாவல் செயல்பாடு பற்றிய பதிவுகளுக்கு இடையேயான வித்தியாசங்களையும் அமெரிக்க தடயவியல் ஆய்வு நிறு வனம் கண்டுபிடித்தது. இவற்றின் மூலமாக, ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட தலித் தலைவர்கள் - அறிவுஜீவிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான ஒட்டுமொத்த வழக்குமே புனை யப்பட்டவைதான் என்ற கருத்து வலுவடைந்துள்ளது.