இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த தமிழ்நாட்டு அறிவியல் மேதைகள் 9 பேர் இந்த மேடையில் அமர்ந்திருப்பது என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு - வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் - மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாடிய மகாகவி பாரதியார் இப்போது இருந்திருந்தால், இஸ்ரோ சிவனும், மயில்சாமி அண்ணாதுரையும் பிறந்த தமிழ்நாடு, நாராயணனும், சங்கரனும், ராஜராஜனும், ஆசீர் பாக்கியராஜும், வனிதாவும், நிகார் ஷாஜியும் பிறந்த தமிழ்நாடு, வீரமுத்துவேல் பிறந்த தமிழ்நாடு என்று பாராட்டி போற்றியிருப்பார். 2023 ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முக்கியமான நாள்! நிலாவில் இந்தியா இறங்கிய நாள். சந்திரயான் விண்கலத்துடன் லேண்டரானது வெற்றிகரமாக நிலவில் இறங்கிய நாள்!
அரசுப் பள்ளியில் படித்தவர்கள்
1959ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2013ஆம் ஆண்டு சீனாவும்தான் இந்தச் சாதனையை செய்திருக்கிறார்கள். 2008ஆம் ஆண்டு நிலாவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கியது. 2023ஆம் ஆண்டில் அந்த சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது. அதாவது நிலாவை தொட்ட 4ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது! மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பையும் இந்தியா அடைந்திருக்கிறது. இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவப் பகுதியை சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியிருக்கிறது. அந்த சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்த, அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் செயல்படுத்திக் காட்டியது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை! இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அதுதான் மிகமிகப் பெருமைக்குரியது. மிகமிகச் சாதாரண ஊர்களில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து - படித்து முன்னேறியவர்கள். முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக இருந்து விஞ்ஞானிகளாக உயர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக இரண்டு பேர் பெண்கள். இந்த மேடையே சமூகநீதியின் அடையாள மாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. ‘‘என்னரும் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்விகற்றுப் பன்னறும் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி இன்புற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?’’ என்று ஏக்கத்துடன் பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அது இந்த நாள்தான்! அதன் அடையாளமாக இருப்பவர்கள்தான் இந்த 9 மேதைகளும். என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தினர் இவர்கள்தான் தங்களுடைய வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.
9 மேதைகள்
டாக்டர் கே.சிவன் கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை என்ற ஊரில் பிறந்தவர். 1982-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்து 2018ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக உயர்ந்த ஆற்றலுக்குரியவர். பி.எஸ்.எல்.வி. மூலம் 104 விண்கலங்களுக்கான திட்ட ஒருங்கி ணைப்பாளராக இருந்தார். ராக்கெட் அமைப்பு தொடர்பாக சித்தாரா-என்ற மென்பொருளை உருவாக்கியவர். சந்திரயான்-2 முழு வெற்றி அடையாத நிலையில், அவர் கண்கலங்கிய காட்சிகள் தான், ஆற்றிய பணிகள், அதன் மேல் அவர் வைத்திருந்த மாறாத பற்றின் அடையாளமாக வெளிப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது! மயில்சாமி அண்ணாதுரை பொள்ளாச்சி அருகில் கோத்தவாடி என்கின்ற கிராமத்தில் பிறந்தவர். 36 ஆண்டுகள் இஸ்ரோவில் பணி யாற்றியவர். மூன்றாண்டு காலம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் திட்ட இயக்கு நராக இருந்தவர். பல்வேறு விண்கலங்களை செலுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். சந்திரயான்-1 வடிவமைப்பில் இந்தியக் கொடி யை பொருத்தியவர் இவர். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்து விண்ணைத் தொட்டவர் மயில்சாமி அண்ணாதுரை. வி.நாராயணன் அவர்கள் குமரி மாவட்டத் தில் பிறந்தவர். திருவனந்தபுரம் திரவ உந்து சக்தி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். இஸ்ரோ தயாரித்த பெரும்பாலான ராக்கெட் தயாரிப்புகளில் அவருடைய பங்கு அளப்பரி யது. சந்திரயான்-3 விண்ணில் செலுத்த பயன் படுத்திய மார்க்-3 ராக்கெட் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானி விருதை இரண்டு முறை பெற்றவர் நாராயணன்.
ஏ.ராஜராஜன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். இஸ்ரோவில் வெளியீட்டு அங்கீகார வாரியத் தலைவராக இருக்கிறார். ககன்யான், எஸ்.எஸ்.எல்.வி. போன்ற இஸ்ரோவுடைய விரிவடைகின்ற தேவைகளுக்கு திடமான மோட்டார்கள் தயாரிப்பதில் இவருடைய பங்கு அளப்பரியது. இஸ்ரோ மெரிட் விருதை 2015 ஆம் ஆண்டு பெற்றவர் இவர். எம்.சங்கரன் திருச்சியில் பிறந்தவர். யு.ஆர். ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர். சந்திரயான் 1,2,3 - ஆகிய மூன்று திட்டங்களிலும் அவர் தன்னை ஒப்ப டைத்துக் கொண்டு பணியாற்றி இருக்கக்கூடி யவர். சூரியனை பற்றி ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்-1 என்ற விண்வெளித் திட்டத்திலும் பணியாற்றியவர். தொழில்நுட்பக் கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்களில் ஒருவர் நம்முடைய எம்.சங்கரன். ஆசீர் பாக்கியராஜ் தூத்துக்குடியில் பிறந்தவர். ராக்கெட் எஞ்சின் - விண்கல இயந்தி ரங்களின் உயர்சோதனைத் துறையில் பெரும் ஈடுபாடு கொண்டவர். ராக்கெட் நிலை ஒருங்கிணைப்புகளில் நவீன வசதிகளை நிறு வியவர். ஜி.எஸ்.எல்.வி-யை இவருடைய குழு தான் ஒருங்கிணைத்தது. உயர் தொழில்நுட்பங் களை இணைப்பதில், இவருடைய பங்களிப்பு முக்கியமானது.
டாக்டர் எம்.வனிதா சென்னையைச் சேர்ந்தவர். சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குந ராக இருந்த பெருமைக்குரியவர். மங்கல்யான் வடிவமைப்பிலேயும் முக்கியப் பங்காற்றியவர். இஸ்ரோவில் திட்ட இயக்குநராக பணி யாற்றிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெரு மைக்குரியவர். சிறந்த பெண் விஞ்ஞானி விருதையும் பெற்றவர். டாக்டர் நிகார் ஷாஜி தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். 1987 முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவின் சூரியன் ஆய்வுத் திட்டமான ஆதித்யா எல் 1 திட்டத்தினுடைய திட்ட இயக்குந ராக செயலாற்றினார். டாக்டர் வீரமுத்துவேல் விழுப்புரத்தில் பிறந்தவர். கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஏவப் பட்ட சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிகரமான இயக்குநர் தான் நம்முடைய வீரமுத்து. ‘‘அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் நான் ஒரு ஆவரேஜ் மாணவன். அடுத்து எங்கே படிக்கவேண்டும், என்ன படிக்கவேண்டும் என்று எந்த ஒரு ஐடியா வும் எனக்கு இல்லை. அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினர் யாரும் படித்தவர்கள் இல்லை’’ என்று சொல்கின்ற அளவுக்கு சாதாரணப் பின்புலத்தில் பிறந்து சரித்திர சாதனையை படைத்திருக்கிறார் வீரமுத்து.
இரண்டு அறிவிப்புகள்
இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான இந்த 9 பேருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டாவது அறிவிப்பு எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை உரு வாக்கும் வகையில் செயல்படுத்தப் போகிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முது நிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு கல்விக் கட்ட ணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அந்த மாண வர்கள், அறிவியலாளர்களின் தலைமையில் அமைக்கப்படுகின்ற குழுக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தக் கல்வி உதவித் தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும் .
இஸ்ரோவுக்கு பாராட்டு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அனைத்து அறிவியலாளர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் அறிவியல் துறையில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. நம்மை விட அதிகமான தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்ற நாடுகளில் இருக்கலாம். ஆனால், அதிக மான தொழில்நுட்ப அறிவுக் கூர்மை கொண்ட வர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். பூமிக்கு அப்பால் உள்ள அனைத்து ஆராய்ச்சிகளும் தொய்வின்றி தொடரட்டும். சூரியன் பற்றியும் - நிலாவை பற்றியும் எல்லா ஆய்வுகளும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் வரை அனைத்து அறிவியல் முயற்சிகளும் வெற்றி கரமாக நடைபெறட்டும். இந்திய நாட்டைக் காப்போம்! நாட்டுக்கு அப்பால் உள்ள உலகத்தையும் கற்போம் .
‘‘ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’’ என்ற தலைப்பில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் இருந்து