states

பெண் தொழிலாளர் உரிமைப் போராட்டத்திற்கு வடிவம் கொடுத்த தலைவர் மைதிலி சிவராமன்

கோவை, மே31-  பெண் உரிமை போராளி, சமூக சிந்தனையாளர், தொழிற்சங்கவாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் மைதிலிசிவராமன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று நடைபெற்றது. கோவை காந்திபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுஉறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நினைவேந்தல் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியதாவது: 1979, 80 காலகட்டத்தில் சென்னையில் பாலு கார்மெண்ட் தொழிற்கூடத்தில் வேலை பார்த்து வந்தேன். அங்கு 500 பெண் தொழிலாளர்கள் பணியாற்றினர். நாங்கள் நான்கைந்து ஆண்கள் மட்டுமே வேலை பார்த்தோம். அங்கு பெண்களை கொடுமையான முறையில் நிர்வாகம் பழிவாங்கியது. சிறிய தவறுக்குக் கூட பழிவாங்குவது தொடர்ந்தது. அப்போது நான் திமுகவை சேர்ந்தவன் என்றாலும், தொழிற்சங்கத்தை கட்ட வேண்டும் என முடிவெடுத்து இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிற செல்வசிங் மற்றும் ஜெயபால் மற்றும் நினைவில் வாழும் சீனிவாசன் போன்றவர்களோடுதொடர்பு கொண்டு சங்கத்தை கட்டினோம். இரண்டு வருடகாலம் போராட்டத்தை தீவிரமாக நடத்தினோம். தமிழகத்தில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்ற அப்படியொரு தீவிரமான போராட்டம் இதுவரை நடைபெற்றதில்லை. அப்படியான போராட்டங்களை முன்னெடுத்தோம்.

முழுமுதற்காரணம்  தோழர் மைதிலி சிவராமன் 

விபிசி, ஹரிபட், விஜிகே போன்ற தலைவர்கள் இந்த போராட்டத்தை வழிநடத்தினார்கள். பெண் தொழிலாளர்கள் மத்தியில் பேசுவதற்கு இந்த தலைவர்கள் தோழர் மைதிலி சிவராமனைத் தான் அனுப்பி வைப்பார்கள். வாயிற்கூட்டங்களில் பேசி பெண் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை நடத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்கினார்கள். அந்த தொழிற்சங்கத்திற்கு நான் தலைவராக இருந்தேன். மைதிலி சிவாராமன் அவர்கள் செயலாளராக இருந்தார். 500 பேர் பெண்கள் இருந்த தொழில் நிறுவனத்தில் நான்கைந்து ஆண்கள் மட்டும் இருந்த சங்கத்திற்கு நான் தலைவராக பொறுப்பேற்றேன். மற்ற ஆண்கள் எல்லாம் நிர்வாகத்திற்கு பயந்து பின்வாங்கினர். ஆனால் நிறுவனத்தில் பணியாற்றிய 500 பெண் தொழிலாளர்களும் போராட்டத்தில் உறுதியோடு நின்றனர். ஒரு பெண் தொழிலாளர் கூட நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செல்லவில்லை. இதுதான் மிகச்சிறப்பு என்றால், இதற்கு முழு முதற் காரணம் தோழர் மைதிலி சிவராமன் அவர்கள் வாயிற்கூட்டங்களில் பேசி பெண் தொழிலாளர்களை உணர்வுமிக்கவர்களாக உருவாக்கினார் என்பதே. உண்ணாவிரதம், ஊர்வலம்என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. இந்த அனைத்து போராட்டங்களிலும் மைதிலி சிவராமன் அவர்களின் பங்கேற்பு இல்லாமல் இருந்ததில்லை. இந்நிலையில் ஒரு நாள்கோட்டையை முற்றுகையிடுவது என முடிவெடுத்தோம். அன்று எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தார். கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். எப்படி இந்த ஐநூறு பெண்களைஅழைத்து செல்வது என யோசித்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் மைதிலி சிவராமன் அவர்கள்ஒருநல்ல யோசனையை முன்வைத்தார். 

ஆண்கள் கோட்டைக்குள் செல்வதுதான் கடினம். பொதுமக்களில் ஒருவராக மனுகொடுப்பதுபோல கோட்டைக்குள் நான்கைந்து பேராக உள்ளே நுழைந்து விடலாம். பெண்கள்நான்கைந்து பேராக தனித்தனி வழிகளில் உள்ளே சென்றுவிடலாம் என யோசனை தந்தார். அதன்படியேகோட்டைக்குள் செல்கிற 8 வழிகளிலும் பெண் தொழிலாளர்கள் அனைவரும் உள்ளே வந்துவிட்டனர். நானும் உள்ளே நுழைந்து விட்டேன்.  முதலமைச்சர் எம்ஜிஆர் கோட்டையில் அலுவலகத்தில் அமர்ந்து இருக்கிறார். நமது பெண் தொழிலாளர்கள் ஆங்காங்கே தனித்தனியாக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காக கோட்டைக்குள் நின்று தனி ஆளாக முதலமைச்சர் அலுவலக வாயில் முன்பு நின்று முழக்கங்களை எழுப்பினேன். இந்த முழக்கங்களை எழுப்பியவுடன் ஆங்காங்கே இருந்த ஐநூறு பெண் தொழிலாளர்களும் என்னை சுற்றி கூட்டமாக சேர்ந்து கொண்டு அவர்களும் முழக்கங்களை எழுப்பத் துவங்கினர்.  இதனையறிந்த முதலமைச்சர் அதிகாரிகளை அனுப்பி என்னை அழைத்துவரச் சொன்னார். நான் முதலமைச்சர் இங்கே வந்து எங்களை சந்திக்க வேண்டும் என்றேன். அன்று எனக்கு 21 வயது. இளைஞருக்கே உரித்தான துடிப்பான செயல்பாடு அது. முழக்கமிட்டது நான் என்றாலும் இந்த போராட்டத்தை கட்டுக்கோப்பாக ஐநூறு பெண்களையும் வழிநடத்தியது தோழர் மைதிலி சிவராமன் அவர்கள்தான்.  பின்னர் காவலர்களை கொண்டு பலவந்தமாக என்னை அழைத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால் என்னை சுற்றி நின்ற பெண்தொழிலாளர்களின் ஆவேசத்தை தாண்டி காவலர்களால் என்னை அழைத்துசெல்ல முடியவில்லை. பின்னர் வேறு வழியின்றி எம்ஜிஆரே கீழே இறங்கி வந்து எங்களிடம் பேசினார்.என்னைப்பார்த்து தாய்க்குலங்களை தவறாக வழிநடத்துகிறீர்கள் என்றார். நானோ இந்த தாய்க்குலங்கள்தான் ஆறு மாதங்களாக பட்டினியில் இருக்கிறார்கள் என திரும்ப பதில் அளித்தேன். முதல்வரை எதிர்த்துப் பேசுவதை கண்ட அதிகாரிகள் என்னை அமைதிப்படுத்த முயன்றனர். பின்னர் கோரிக்கைகளை கேட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்னமும் அந்த பிரச்சனை முடியவில்லை என்றாலும், அன்று பெண் தொழிலாளர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம் மறக்க முடியாதது. “எம்ஜிஆரை கோட்டையில் முற்றுகையிட்ட பாலு கார்மென்ட் தொழிலாளர்கள்” என்கிற தலைப்புச் செய்திதான் அன்றைய நாளிதழ் அனைத்திலும் வெளி வந்திருந்தது. 

மிகச்சிறந்த 
பெண் உரிமைப்போராளி

இதனைத்தொடர்ந்து போராட்டங்கள் நடந்தவிதம் குறித்து சொல்வதற்கு தோழர் விபிசி.யை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றோம். அப்போது விபிசி என்னைப் பார்த்து,தோழர் நீங்கள் எங்கள் கட்சியில் இருக்க வேண்டியவர் என்றார். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அன்று வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திய போராளி தோழர் மைதிலி சிவராமன் அவர்கள். இதேபோன்று பெண்களுக்கு உதவித்தொகை பெற்றுத்தருவது. பெண் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது, சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது, உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் பேசவைப்பது என தொடர்ந்து இடைவிடாது பணியாற்றியவர் மைதிலிசிவராமன் அவர்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்நிகழ்வில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், மருதமலை சேனாதிபதி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் மீனாலோகநாதன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவைமாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கோவை மாநகராட்சி மற்றும்பேரூராட்சி, ஊராட்சி கவுன்சிலர்கள், முன்னணி ஊழியர்கள்உட்படதிரளானோர் பங்கேற்றனர்.