குறுவை சாகுபடி நெல்பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சிபிஎம் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்துள்ள நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய இதுவரை அரசின் சார்பில் அறிவிப்பு வராமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு இதேபோன்ற நிலை நீடித்ததால் குறுவை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இம்மாதம் 31ந் தேதிக்குள் குறுவை பயிருக்கான காப்பீடு செய்ய வேண்டுமென்று ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில் காப்பீடு செய்வதற்கான நிறுவனம் எது என்று தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது.
இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கடந்த 11.7.2022 அன்று தமிழக முதல்வரிடமே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இரண்டு நாட்களில் பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பு வரும் என தமிழக அரசின் சார்பில் உறுதியளித்திருந்த நிலையில் இதுவரை அறிவிப்பு இல்லாமல் உள்ளது ஏற்புடையதில்லை.
எனவே, தமிழக அரசு குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். எந்த நிறுவனமும் காப்பீடு பெற வரவில்லையென்றால் தமிழக அரசே தனியாக பயிர் காப்பீடு செய்வதற்கான நிறுவனத்தை துவக்கிட வேண்டும். மேலும் குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காலத்தை 2022 ஆகஸ்ட் 15ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.