சென்னை,நவ.9- மோட்டார் வாகனங்களுக்கான தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள் மற்றும் டாக்சிகள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு திருத்தப்பட்ட புதிய வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி அதன் விலை ஒரு லட்ச ரூபாய் என்றால் அதில் 10 விழுக்காடும், வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தால் 12 விழுக்காடும் வரியாக வசூலிக்கப்படும். பழைய இருசக்கர வாகனங்களுக்கு அதாவது ஒரு வருட பழையது எனில் ரூ.1 லட்சம் வரையிலான விலையில் 8.25 விழுக்காடும், ரூ. 1 லட்சத்திற்கும் மேல் விலை இருந்தால் 10.25 விழுக்காடும், 2 ஆண்டு வரை வாகனம் பழையது என்றால் ரூ.1 லட்சம் வரையிலான விலையில் 8 விழுக்காடும், ரூ. 1 லட்சத்திற்கும் மேல் விலை இருந்தால் 10 விழுக்காடும் வரி விதிக்கப்பட்டுள்ளது. வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரம், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது. சென்னை, மதுரை, கோவை போன்ற நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, 15 ஆண்டுகளாக நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகனங்களுக்கு சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகு ரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்களில் தினசரி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் என சுமார் 8 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின் றன. அப்போது, அந்த வாகனங்களின் விலையின் அடிப்படையில் அவற்றுக்கு வரி விதிக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட படி, இருசக்கர வாகனங்களுக்கு 8 விழுக்காடும், கார்களின் வகைகளுக்கு ஏற்றாற் போல் 10 முதல் 15 விழுக்காடு வரி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகத்தின் பரிந்துரையின் பேரில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு வாகனங்களுக்கு சாலை வரி உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ளது. இதில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.