சென்னை, ஜன. 3 - ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சிக்கு சென்ற பெண் சுபஸ்ரீ மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈஷா மையத்தை பூட்டி சீல் வைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஜனவரி 2 அன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: கோவை, வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி சுபஸ்ரீ என்பவர் வீடு திரும்பாமல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஈஷா யோகா மையத்திற்கு டிசம்பர் 11 ஆம் தேதியன்று ஒருவார கால பயிற்சிக்கு சுபஸ்ரீ சென்றுள்ளார். அதன்பிறகு பயிற்சி முடிந்து வீடு திரும்பாத நிலையில் அவரது கணவர் தேடிச் சென்றும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் மீது மேற்கொண்ட விசாரணையில் சுபஸ்ரீ தனது பொருட்கள் எதையும் எடுக்காமல் சாலையில் பதற்றத்துடன் ஓடிச் செல்லும் காட்சி சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் 31.12.2022 அன்று ஈஷா யோகா மையத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் சுபஸ்ரீ சடலம் மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவசர, அவசர மாக உடற்கூராய்வு செய்து சுபஸ்ரீயின் உடலை காவல்துறையினர் எரித்துள்ளதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஈஷா யோகா மையத்தின் மீது அடுக்கடுக்கான பல புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நில ஆக்கிரமிப்பு, பழங்குடியின மக்களை வெளியேற்றுதல், வன விலங்குகளை வேட்டையாடு வது, பெண்கள் - சிறுமிகளை அடைத்து வைத்து போதைப் பழக்கத்திற்கு உட்படுத்துவது, உரிய அனுமதியின்றி வெளிநாட்டி னர் வந்து செல்வது உள்ளிட்டு பல்வேறு புகார்கள் ஈஷா யோகா மையத்தின் மீது குவிந்த வண்ணம் உள்ளன. மகா சிவராத்திரி விழா வில் பிரதமர் மோடி கலந்து கொண்டதை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி ஜக்கி வாசுதேவ் அனைத்து விதமான சட்டவரம்புகளை யும் மீறி செயல்பட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள், பாஜக முக்கிய தலைவர்கள் ஈஷா மையத்திற்கு வந்து செல்வதால் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமலும் கண்டும் காணாமலும் இருக்கும் போக்கே உள்ளன. இதன் விளைவே தற்போது சுபஸ்ரீயின் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, தமிழக அரசு சுபஸ்ரீயின் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு இச்சம்பவம் குறித்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். தொடர்ந்து ஈஷா மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரம்பு மீறிய நடவடிக்கைகள் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடுவதுடன் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை முடியும் வரை ஈஷா யோகா மையத்தை பூட்டி சீல் வைத்து அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.