states

விலை உயர்வை கட்டுப்படுத்துக! வேலைவாய்ப்புகளை உருவாக்குக!

புதுதில்லி, ஆக.7- விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் வேலைகளை உருவாக்கக் கோரியும் செப்டம்பர் 1-7 அகில இந்திய எதிர்ப்பு வாரம் அனுசரித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் தலைநகர் புதுதில்லியில் ஆகஸ்ட் 4-6 தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் மத்தியக் குழு கட்சியின் கிளைகளுக்கு நான்கு அறைகூவல்கள் விடுத்துள்ளது. அவை வருமாறு:

1.    வரும் 2023 செப்டம்பர் 1-7 தேதிகளில் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், வேலைகள் உருவாக்கக் கோரியும் அகில இந்திய கிளர்ச்சி வாரம் அனுசரித்திட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கிளைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

2.    பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள கோரிக்கை களின் அடிப்படையில் அகில இந்திய பிரச்சாரத்திற்கு அறைகூவல் விடுப்பதற்காக, இடதுசாரிக் கட்சிகளின் சிறப்பு மாநாட்டை நடத்திட எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.

3.    மத்தியத் தொழிற் சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகியவற்றின் கூட்டு மேடையால் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் திட்டத்திற்கு ஆதரவு அளித்திட வேண்டும்.

4.    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினால் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ள 2023 அக்டோபர் 5 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய தில்லி பேரணிக்கு விரிவான முறையில் ஆதரவினை அளித்திட வேண்டும். இவ்வாறு மத்தியக் குழு அறைகூவல்கள் விடுத்துள்ளது. (ந.நி.)