லக்னோ, டிச. 23 - பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த நாடகக் கலைஞர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ‘இந்திய ஒற்றுமை நடைபயணம்’ 107 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் பயணம் ஜனவரி 3 அன்று பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இந்நிலையில் ‘ஒமைக்ரான் பிஎப்-7’ என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவுவதால், நடைபயணத்தை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியது விவாதமாகி இருக்கிறது. ராகுலின் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே, ஒன்றிய அரசு கொரோனா அச்சுறுத்தல் என்ற காரணத்தை முன்வைப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் காங்கிரஸ் பின்பற்றும் என்றும், ஆனால் நடைபயணம் நிறுத்தப்படாது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சல்மான் குர்ஷித் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். “ஜனநாயக அமைப்பில், ஒவ்வொரு கட்சிக்கும், தனி மனிதனுக்கும் தங்கள் கருத்தைப் பேச உரிமை உண்டு. காங்கிரஸ் யாத்திரையைக் கண்டு ஒன்றிய அரசு பயப்படுகிறது, அதனால்தான் பல்வேறு உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன. கொரோனாவிற்கு பயப்படாதவர்கள், ராகுலின் நடைபயணத்திற்கு அஞ்சுகின்றனர். எனவே, நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இந்திய ஒற்றுமை நடைப்பயணதிற்கு, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து தேவையான அனுமதியை காங்கிரஸ் பெற்றுள்ளது. பாஜக அரசு நிர்வாகத்தின் மூலம் அதைத் தடுக்க முயன்றால் ஜனநாயக அமைப்புகளுக்கு அது பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி, முகக்கவசம் அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பிரதமர் மோடி மிகச் சிறந்த நாடகக் கலைஞர்” என்றும் குர்ஷித் கிண்டலடித்துள்ளார்.