states

தமிழ்நாடு ஹோட்டலுக்கு சீல் வைப்பு வாடகை பாக்கி ரூ.44 லட்சம்

விருதுநகர், மே.1- விருதுநகரில் உள்ள  தமிழ்நாடு ஹோட்டலுக்கு வாடகை பாக்கி ரூ.44 லட்சம் செலுத்தாத காரணத்தால் சீல் வைக்கப்பட்டது. விருதுநகர்- சாத்தூர் சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. இதை 3 ஆண்டுகால குத்தகைக்கு கோவில்பட்டியைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவர் எடுத்துள்ளார். இந்த விடுதியின் உள்ளே மதுபானக் கூடம் உள்ளது. வெளிப் பகுதியில் தேநீர் விடுதி மற்றும் பழக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், அழகுபாண்டி, சுற்றுலா வளர்ச்சிக் கழ கத்திற்கு ரூ.44 லட்சம் உரிமத் தொகையை கட்டவில்லை யாம். இதுகுறித்து பலமுறை அறிவிப்பணை வெளியிட்டும் பணம் செலுத்தவில்லையெனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுற்றுலா வளர்ச்சிக் கழக மதுரை மண்டல அதிகாரி கிருபாகரன் என்ற தினகரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் சுப்பு லட்சுமி ஆகியோர் தமிழ்நாடு ஹோட்டலுக்கு நேரில் சென்றனர். பின்பு, கதவை பூட்டி சீல் வைத்தனர். மேலும், வெளியே உள்ள பழக்கடை மற்றும் தேநீர் விடுதிகளை திங்கள் கிழமைக்குள் அகற்ற வேண்டுமென உத்தரவிட்டனர்.