ஹோசிமின் சிட்டி, பிப்.2- வெளிநாடுகளுக்குப் பல்வேறு உயர்கல்விப் படிப்புக்காகச் சென்ற வியட்நாம் இளைஞர்கள் சொந்த நாட்டில் தங்கள் பணியைத் தொடர விரும்பி, திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே, மேற்கு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளில் ஆய்வுப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்காகச் சென்ற வியட்நாம் இளைஞர்கள் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். தொடக்க கட்டத்தில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தாலும், அவற்றை சமாளித்து நாட்டிற்காக தங்கள் சேவையைச் செய்து வருகிறார்கள். இதனால், மேலும் பல இளைஞர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்காவில் ஏழாண்டுகள் படித்து விட்டு, தனக்கு அங்கேயே கிடைத்த வாய்ப்பை ஏற்காமல், வியட்நாம் திரும்பிய டோ டியன் ஃபாட் என்ற ஆய்வாளர்,
இங்குள்ள வியட்நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். தனது ஐந்தாண்டுக் காலத்தில் அறிவியல் ஆய்வில் தன்னை மேம்படுத்த இந்த நிறுவனம் உதவியதோடு, புதிய கண்டுபிடிப்புகளையும் அவர் செய்ய வழிவகுத்தது. இவரைப் போன்ற ஏராளமானவர்கள் தங்கள் பணிகளைத் தொடர்கிறார்கள். இங்குள்ள வாய்ப்புகளைப் பார்த்து தங்கள் குடும்பத்தினரின் விருப்பத்தை ஏற்றுத் திரும்பி வந்தவர்களும் இதில் அடங்குவர். வியட்நாம் இளைஞர்கள் திரும்ப விருப்பம் தெரிவிப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் அமைந்துள்ளன. வியட்நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ஹனோய் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், விவசாய மரபணு மையம், மேகோங் பாசன நெல் ஆய்வு மையம் ஆகிய சிறப்பு ஆய்வு நிறுவனங்களை மேம்படுத்துவதில் வியட்நாம் அரசு வெற்றி பெற்றுள்ளது.