சென்னை, செப். 3 - அரசு அலுவலகங்களில் மதச்சார்பின்மையை கடை பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று (செப்.2) சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாடு வலி யுறுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் வர்ணாசிரம கோட்பாட்டை தொகுத்தெழுதிய மநுவின் சிலை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வாய வளாகத்தில் உள்ளது. 1989ஆம் ஆண்டு முதல் உள்ள அந்த சிலை அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு விரோதமானது. எனவே உடனடியாக அகற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் பூஜைகள், புண்ணியார்த்தனம், யாகம் போன்ற ஒரு மதத்தின் சார்பான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இது அரசியல் சட்டத்தின் மதச்சார் பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது. எனவே, இவற்றை தடுப்பதோடு, குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டு இடங்களை அரசு நிர்வாகிக்கக் கூடாது; புதியதாக அமைப்பதையும் அனு மதிக்கக் கூடாது. சாதி, மதம் சார்ந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், பணிசார் நிலையில் கலந்து கொள்ளக்கூடாது. அனைத்து ஊர்களிலும் பொது மயானம் அமைக்க வேண்டும். ஒரு ஊர், ஒரே சுடுகாடு, இடுகாடு என்கிற நிலையை எட்ட வேண்டும், சாதி, மத மறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கு அரசு, புகலிடங்களை உருவாக்க வேண்டும். அவர்களை சாதி, சமய மறுப்பாளர் என அறிவித்து அவர்களின் குழந்தைகளுக்குக் கட்டாய, கட்டணமில்லா கல்வி வழங்கி வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. இந்த மாநாட்டின் பிரகடனத்தை முன்மொழிந்து பேசிய ஆதவன் தீட்சண்யா, “ நம்மிடம் உள்ள பார்ப்பனீய கூறுகளை நீக்க வேண்டும்.
சுயமரியாதையுள்ள வாழ்க்கை என்று பெரி யாரும், சுரண்டலற்ற பொன்னுலக வாழ்க்கை என்று மார்க்சும், அரசியல் விடுதலையுடன் சமூக பொருளாதார விடு தலையையும் அடையும்போதே முழு விடுதலை அடைந்த வர்களாவோம் என்று அம்பேத்கரும் கூறினர். இதன் பொருள் சனாதனத்திடமிருந்து, வர்ணாசி ரமத்திடமிருந்து, பார்ப்பனீயத்திடமிருந்து நம்மை முழுமை யாக விடுவித்துக் கொள்வதுதான். அதற்கான போராட்டங் களை அனைத்து தளங்களிலும் வீச்சுடன் முன்னெடுக்க வேண்டுமாய் சமத்துவத்தில் அக்கறையுள்ள அனை வரையும் மாநாடு அழைக்கிறது” என்றார். மாநாட்டில், தேவதாசி பெண்கள் விடுதலைச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாலம்மா, முதுமுனைவர் மு.பெ.சத்திய வேல் முருகனார், இடதுசாரி செயற்பாட்டாளர் மருதை யன், தமிழ்ப் பல்கலைக் கழக தத்துவத்துறை பேரா.கோ.ப. நல்லசிவம், ‘தமிழ்க்கேள்வி’ செந்தில்வேல், ‘அரண்செய்’ பா.ம.மகிழ்நன், ‘யு2 புரூட்டஸ்’ மைனர் வீரமணி, வழக்கறி ஞர் அருள்மொழி, கவிஞர் நந்தலாலா, எழுத்தாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மணியம்மை உள்ளிட்டோர் பேசினர். தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ. நன்றி கூறினார்.