மோடி அரசு மவுனம் ஏன்? கே.பாலகிருஷ்ணன் கேள்வி
திருநெல்வேலி, ஆக. 22- மோடி அரசின் திட்டங்களில் ஓராண்டு தணிக்கை ஆய்வில் மட்டும் மொத்தம் ரூ.7.5லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றால், 10 ஆண்டுகால ஆட்சியில் எத்தனை லட்சம் கோடிகள் சூறையாடப்பட்டிருக்கும் என, கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். திருநெல்வேலியில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய தலைமைக் கணக்கு அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் மோடி ஆட்சியின் ஊழல் - முறைகேடுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.7.5 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடி செல விடப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. ஆனால், மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியோ, சிஏஜியிடம் அதிகாரிகள் சரியாக பதில் சொல்லவில்லை; அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் எனக் கூறி சிஏஜி அறிக்கையை திசை திருப்புகிறார். இந்த விவகாரத்தில் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஒரு சிஏஜி அறிக்கையிலேயே இவ்வ ளவு பெரிய ஊழல் வெளியே வந்துள்ளது. அப்படியானால், பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும்?
அண்ணாமலைக்கு தகுதி உள்ளதா?
அப்படியிருக்கையில் ஊழலைப் பற்றிப் பேச பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலைக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆரூத்ரா கோல்டு ஊழலில் பாஜக தலைவர்களுக்கு சம்மந்தம் இருக்கிறது. அந்த ஊழல் வழக்கில் அண்ணாமலையே கூட விசாரணை வளை யத்திற்குள் வர வாய்ப்புள்ளது. அதை மறைக்கவே தமிழக அரசு மீது அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அதிமுக மாநாட்டில் சிஏஜி அறிக்கை குறித்து கூட பேசவில்லை. பிறகு எதற்கு அந்த மாநாடு?
வீரதீரச் செயலுக்கான விருது அளித்திடுக!
நாங்குநேரி சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரை மற்றும் அவ ரது தங்கையை சந்தித்து நலம் விசாரித் தோம். அவருக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் சாதிய வன்மத்துடன் செயல்படுவது அநியாய மானது. தனது அண்ணனின் உயிரை காப் பாற்றிய சந்திரா செல்விக்கு வீரதீர செய லுக்கான விருது வழங்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்திருப்பது வரவேற்கத் தக்கது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை யை செயல்படுத்தவேண்டும். திசையன்விளையில் சாதிய தாக்குதலில் உயிரிழந்த முத்தையாவின் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் காலில் விழுந்ததன் மூலம் ரஜினி தனது மரியாதையை குறைத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். (ந.நி.)
செப்டம்பர் 7 மறியல் போர் : 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள்
மோடி அரசின் மோசமான கொள்கைகளை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 1 முதல் 6 வரை வலுவான பிரச்சார இயக்கத்தை நடத்தவுள்ளோம். 10 ஆயிரம் குழுக்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளன. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 7 அன்று ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல், ரயில் மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளோம். அதில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள். தென் மாவட்டங்களில் மட்டும் ரயில் மறியல் போராட்டத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.