states

கட்டண உயர்வால் விலைவாசி உயரும்: ஏ.எம்.விக்கிரமராஜா

சென்னை, மார்ச் 31- சுங்கச்சாவடி கட்டண உயர்வால் விலைவாசி உயரும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்  தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு சுங்கச்சாவடிகளில் 10 விழுக்காடு முதல்  25 விழுக்காடு வரை, ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அனைத்து சுங்கச்சாவடிகளிலும் உயர்த்த இருப்பதாக அறிவிப்பு கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக அரசின் பல்வேறு நடவடிக்கைகளாலும், கொரோனா பேரிடராலும்  பொதுமக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் உருக் குலைந்து போயுள்ளது. இந்நிலையில் தற்போது ஒன்றிய அரசு அறிவித்துள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

உக்ரைன் - ரஷ்ய போரினாலும், அத்தியாவசியப் பொருட்கள் விலை  குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்டுவிட்ட நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வும் நுகர்வோரின் மீதே திணிக்கப் படும். பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டுமானால், ஒன்றிய அரசு அறிவித்துள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.   மேலும் ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்த 60 கிலோ  மீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அனைத்தும் அரசின் வழிகாட்டுதலின்படி உடனடியாக அகற்றப்பட வேண்டும்.  மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்காரி வாக்குறுதியின் படி, ஒன்றிய அரசின் வரி வருவாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை நெருங்கியிருக்கும் நிலையில், அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படுமாயின் வணிகர்க ளுக்கும் - நுகர்வோர்களுக்கும் மிகப்பெரும் தீர்வாக இருக்கும்  என்பதோடு, விலைவாசி உயர்வும் நிச்சயம் கட்டுக்குள் வரும்.   மேலும் அதனால் பணப்புழக்கமும் அதிகரிக்கும். இந்தியப் பொருளாதாரமும் ஏற்றம் பெரும். மேலே குறிப்பிட்டுள்ள காரணிகளை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.