states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.யாக பி.டி. உஷா பதவியேற்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர் பதவிகள் உள்ளன. இந்த இடங்களுக்கு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், அண்மையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகியோரை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இவர்களில் இளையராஜா இன்னும் பதவியேற்றுக் கொள்ளாத நிலையில், தடகள வீராங்கனை பி.டி. உஷா புதனன்று மாநிலங்களவையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

ராணுவ வீரர்கள் தேர்வில் சாதியா? ராஜ்நாத்சிங் மறுப்பு!

ராணுவத்திற்கு நான்காண்டு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆளெடுக்கும் ‘அக்னிபாதை’ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த இளைஞர்களிடம் சாதி, மதச் சான்றிதழ்கள் கேட்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.பி. உபேந்திர குஷ்வாஹா மற்றும் பாஜக எம்.பி. வருண் காந்தி ஆகியோர் இதுதொடர்பாக குற்றம் சாட்டியிருந்தனர். இந்திய ராணுவம் உருவாக்க முயல்வது அக்னிவீரர்களையா அல்லது சாதி வீரர்களையா? என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், “ராணுவ வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு வதந்தி” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நடைமுறையே தற்போதும் தொடர்கிறது; இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியக்கொடியை மதிக்காதவர்கள்தான் பாஜக-வினர்! 

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ‘ஹர் ஹர் திரங்கா’ என்ற பெயரில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, ஆகஸ்ட் 11 முதல் 17 வரை சுதந்திர வாரமாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில்,  உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் இந்த அறிவிப்பை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் விமர்சனம் செய்துள்ளார். “தேசியக்கொடியை பாஜக ஒருபோதும் மதித்ததில்லை. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு இல்லாதவர்கள் தேசபக்தி என்ற பெயரில் வேலை செய்கின்றனர்’’ என்று சாடியுள்ளார். “உ.பி. மக்கள் ஆகஸ்ட் 9 முதல் 15- ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்” என்று அகிலேஷ் தனியாக ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானுடனும் நாம் பேசித்தான் ஆக வேண்டும்..!

“காஷ்மீர் பிரச்சனையைப் பொறுத்தவரை இரு வழிகளிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதம் என்று சொன்னால், அதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போல பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதனால் அப்போது தீவிரவாதம் குறைந்தது மற்றும் ஊடுருவலும் குறைந்தது. ஒவ்வொரு பங்குதாரருடனும் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். அவ்வாறு செய்தால், பீகாரை சேர்ந்த வீரர், சி.ஆர்.பி.எப். வீரர் அல்லது ஏ.எஸ்.ஐ. முஷ்டாக் அகமது (ஜே.கே. போலீஸ்) அல்லது ஒரு சாமானியர் அல்லது காவலில் கொல்லப்பட்ட முஸ்லிம் (முனீர்) போன்றவர்கள் உயிர்  இழக்க மாட்டார்கள்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

‘இலவச ரேவடி’ என ஏழைகள் இழிவுபடுத்தப்படுகிறார்கள்

“இலவசங்களை வாக்குறுதிகளாக அளித்து வாக்குகளை பெறும் ரேவடி (ரேவடி என்பது இனிப்பு பலகாரம்) கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் பதிலளித்துள்ளார். “முதலில், பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலையை (ஒன்றிய பாஜக அரசு) உயர்த்தியது. இப்போது கோதுமை, தயிர் விலைகள் உயர்ந்துள்ளன. மோடி-ஜியின் கோடீஸ்வர நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில், எதிர்காலத்தில் மின்சார விலை அதிகரிக்கப்படும். அதேநேரத்தில், ‘ரேவடி கலாச்சாரம்’ என்ற வார்த்தை மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்த்தகத்தினர் இழிவுப்படுத்தப்படுகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.

பேராசைக்கு எல்லை வேண்டும்: ஷிண்டே மீது தாக்கு!

உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா எம்.பி.க்கள் 12 பேர், செவ்வாயன்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தாவினர். இந்நிலையில் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக உள்ள பர்பானி தொகுதி எம்.பி. சஞ்சய் ஜாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒருவரின் பேராசைக்கு எல்லை வேண்டும். இந்த சிவசேனா-தான் எங்களை பெரிய அரசியல்வாதியாக உருவாக்கியது. பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது. சிலருக்கு நேற்று வரை நல்லதாக இருந்த கட்சி தற்போது மோசமானது போல தெரிகிறது. ஏக்நாத் ஷிண்டே-வின் நோக்கம் நிறைவேறினால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என நினைக்கிறேன். சிவசேனாவை தாக்க வேண்டும் என சந்தர்ப்பவாதிகள் (பாஜக) ஏக்நாத் ஷிண்டேவுடன் சேர்ந்து உள்ளனர். ஒருநாள் அவர்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராகவே ஒருவரை பயன்படுத்தும் காலம் வரும்” என்று கூறியுள்ளார்.

இபிஎஸ் தரப்பிடம் சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஜூலை 20- அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்ப டைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 11ஆம் தேதி அதிமுக  பொதுக்குழு கூட்டம் நடந்த போது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி  தலைமை அலுவலகத்தின் முன்,  எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனை யடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த சீலை அகற்ற கோரி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.மேலும், ஒரு மாதத்திற்கு கட்சி உறுப்பினர்கள் யாரும் கட்சி அலுவலகத் துக்கு அனுமதிக் கக் கூடாது எனவும், சட்டம் ஒழுங்கு  பிரச்சனை ஏற்படாத வகையில்  அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுக ளையும் காவல்துறை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

போலி பத்திரப்பதிவு: சார் பதிவாளர் தற்காலிக பணி நீக்கம்

சென்னை,ஜூலை 20- போலி பத்திரப்பதிவு செய்ததாக திருவள்ளூர் சார் பதிவாளர் சுமதியை  தற்காலிக பணிநீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக சுமதி  என்பவர் பணியாற்றி வந்தார். இவர்  ஆவடி அருகே மோரை கிராமத்தி லுள்ள ஒருவரின் நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து திருவள்ளூர் சார்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் போலியான ஆவணங்கள் கொண்டு அதிக அளவில் பத்திரப்பதிவு திருமணங்கள் செய்து வைத்தது தொடர்பாக அவர் மீது  பல குற்றசாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக பத்திரப்பதிவு ஐஜியிடம் புகார் அளிக்கப்பட்டது. புதனன்று(ஜூலை 20) அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து பத்தி ரப்பதிவு ஐஜி சிவனருள் உத்தர விட்டுள்ளார். இதனால் திருவள்ளூர் உள்ள சார்பதிர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்த சிலர் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் திரும்பி சென்றனர்.

கூடுதலாக நெல் நடவு

சென்னை,ஜூலை 20- உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்க ளுக்கான புத்தாக்கப் பயிற்சி, உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்  செல்வம், க.முத்துசாமி, மு.பெ.  சாமிநாதன் ஆகியோர் பங்கேற்று, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்க ளுக்கு ரூ 1.23 கோடி ரூபாய் மதிப்பி லான மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி யில் பேசிய உழவர் நலத்துறை அமைச் சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “மேட்டூர் அணையிலிருந்து முன் கூட்டியே நீர் திறக்கப்பட்டதால், இந்த  ஆண்டு கூடுதலாக, 25,000 ஹெக்டேர் நிலத்தில் நெல் நடவு நடந்துள்ளது” என்றார்.