states

பாலஸ்தீனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு!

புதுதில்லி, டிச. 2 - இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நிலையான தீர்வு  காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக வெளி யுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. துபாயில் சி.ஓ.பி. 28 காலநிலைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள துபாய் சென்ற பிரதமர் மோடி, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை வெள்ளி யன்று சந்தித்துப் பேசினார். அவரிடம் தற்போதைய போர் நிலவரம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, அக்டோபர் 7 தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், ஹமாஸ் அண்மையில் பணயக் கைதிகள் சிலரை விடுவித்ததற்கு வரவேற்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, “இரு நாட்டு தலைவர்களும் தங்களின் பரந்த மற்றும் துடிப்பான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தனர். இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் குறித்தும் அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.  மேலும், ஹெர்சாக் உடனான தனது சந்திப்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து பாதுகாப்பாக வழங்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். ‘இரு நாடுகள்’ என்ற தீர்வுக்கான இந்தியாவின் ஆதரவையும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சனைக்கு முன்கூட்டிய மற்றும் நீடித்த தீர்வையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இஸ்ரேல் ஜனாதிபதி மட்டுமல்லாமல், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேசி னார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுட னான மோடியின் இருதரப்பு சந்திப்பிலும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் பற்றிய விவாதங்கள் முக்கிய இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.