states

5 கோடி கரும்பு விவசாயிகளை வஞ்சித்த மோடி அரசு!

சென்னை, பிப். 23 - ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ. 24 மட்டுமே விலையை உயர்த்தி 5 கோடி கரும்பு விவசாயிகளை மோடி அரசு வஞ்சித்துள்ளதாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட ஒரு குவிண்டால் கரும்புக்கு 2024-25 ஆண்டுக்கு ரூ. 315-ம், 10.25 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு ரூ. 340-ம் எப்ஆர்பி (FRP) விலையை ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஒன்றிய அரசு அறிவித்துள்ள கரும்பு விலை எப்ஆர்பி ( FRP)  டன்னுக்கு ரூ. 3150-ம், மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ. 215 ம் சேர்த்து தமிழ்நாட்டில் டன்னுக்கு ரூ. 3365 விலையை அடுத்த ஆண்டு அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும். கரும்பு உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. சாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்திச் செலவுடன் ஐம்பது சதவீதம் கூடுதலாக சேர்த்து 9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ. 500 விலை வழங்க வேண்டும் என்ற கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்து, சர்க்கரைத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. l பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 9 சதவீதம் பிழிதிறன் கரும்புக்கு விலை அறிவித்து வந்ததை 10.25 சதவீதம் பிழிதிறனுக்கு என உயர்த்தினர். l எத்தனால், மின்சாரம் உள்ளிட்ட கரும்பு உப உற்பத்தி பொருட்களின் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு தர மறுக்கின்றனர். l கரும்பு கட்டுப்பாடு சட்டத்தில் உள்ள சரத்துக்களை ஒவ்வொன்றாக நீர்த்துப்போக செய்கின்றனர். l ரங்கராஜன் குழு பரிந்துரைப்படி வருவாய் பங்கீட்டு முறையை படிப்படியாக அமல்படுத்த முயற்சிக்கின்றனர்.  l 2019-20 இல் 9 சதவீதம் பிழிதிறனுக்கு விலை அறிவித்து வந்ததை 10.25 சதவீதம் பிழிதிறனாக உயர்த்தினர்.  l கரும்பு உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள நிலையில் பாஜக ஒன்றிய அரசு ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.24 விலை உயர்த்தி ஐந்து கோடி கரும்பு விவசாயிகளை வஞ்சித்துள்ளது. சாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளை பொருட்களுக்கு விலை தர மறுத்து வரும் மோடி அரசு, போராடும் விவசாயிகளை சுட்டுக்கொலை செய்யும் பாஜக மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை முறியடிப்போம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.