சென்னை, ஏப்.16 - பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம்அணிவது அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தில்லியில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் பதட்டப் படத்தேவையில்லை. எதிப்பு சக்தி கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியவில்லை. மரபணு மாற்றம் மூலம் உருமாறி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. எனவே தடுப்பூசி செலுத்தினால் தான் முழுமையான எதிர்ப்பு சக்தியுடன் போராட முடியும். தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைந்து விட்டது என்று அவசரபடாமல் சுகாதாரத்துறை வல்லுனர்கள் கூறும் கருத்துக்களை கடைபிடிக்க வேண்டும். பொது இடங்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கட்டாயம் முகக்வசம் அணிவது நல்லது. ஆனால் தற்போது மக்கள் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுவது கவலை அளிக்கிறது.
தடுப்பூசி போடாதவர்கள்
கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 1.37 கோடி பேர் 2வது தவணை தடுப்பூசி போடாமலும், 48 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமலும் உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி இருந்தும் போடாமல் உள்ளனர். தயவு செய்து தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டதன் மூலம் தான் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டபோதும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
அலட்சியம் காட்டாதீர்
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு வசதி உள்ளது. இவ்வளவு வசதி இருந்தும் தடுப்பூசி போடாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மற்ற நாட்களில் 25 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தமிழகத்தில் எக்ஸ்இ தொற்று பாதிப்பு இல்லை என்றாலும் மார்ச் மாதத்தில் ஒமைக்ரான் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது. 93 விழுக்காடு மக்களுக்கு ஒமைக்ரான் உள்வகை (பி.ஏ.2) தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.