states

ஷாகின்பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் வந்தன

புதுதில்லி, மே 9-  தெற்கு தில்லி ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டதால் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அண்மையில் வடக்கு ஜஹாங்கீர் புரியில் இது போன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி புல்டோசர்கள் கொண்டு வரப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, சம்பவ இடத்திற்கு சென்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் முறையிட்டார்.  அப்போது இஸ்லாமியர்களை குறிவைத்து பாஜக ஆளும் வடக்கு தில்லியில் மாநகர நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இதேபோன்று தற்போது தெற்கு தில்லி ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனிடையே ஜஹாங்கீர் புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது ஷாகின் பாக்கில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து விசாரிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு மறுத்துவிட்டது. இது தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே எதிர்ப்பு காரணமாக ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.