புதுதில்லி, டிச. 23 - நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 29 வரை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், வழக்கமாக நவம்பர் மூன்றாவது வாரத்தில் துவங்கி, 20 நாட்கள் வரை நடைபெறும். ஆனால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின், 2017, 2018-ஆம் ஆண்டுகளில், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரானது டிசம்பரில் நடைபெற்றது. அதன்படி 2022-ஆம் ஆண்டிலும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்கி 29-ஆம் தேதி வரை நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த குளிர்கால கூட்டத் தொடரில் 17 அமர்வுகளில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் ஒன்றிய அரசு கூறியிருந்தது. இந்நிலையில், வெள்ளியன்று நாடாளுமன்றம் கூடியபோது, குளிர்காலக் கூட்டத்தொடர் 5 நாட்கள் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்படுவதாக கூறிய சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மக்க ளவை ஒத்திவைக்கப்பட்டதால், மாநிலங் களவையும் ஒத்திவைக்கப்படுவதாக அதன் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான, அலுவலக பரிந்துரை குழு, டிசம்பர் 20-ஆம் தேதி கூடி ஆலோசனை மேற்கொண்டது.
அப்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, எம்.பி.க்கள் தத்தமது தொகுதிகளில் இருக்க வேண்டியுள்ளது என்று அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்ததாகவும், அதனடிப்படையில் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்வதென ஒரு மனதாக முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையிலேயே தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த கூட்டத்தொடரில், இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் விவகாரம், முக்கியப் பிரச்சனையாக முன்னுக்கு வந்தது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அறிக்கை தாக்கல் செய்தார். எனினும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனை அரசு ஏற்கவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து வெளிநடப்பில் ஈடுபட்டன. சீன விவகாரத்தில் விவாதம் நடத்தக் கோரி, கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்றும் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். எனினும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமலேயே, மோடி அரசு கூட்டத் தொடரைத் தற்போது முன்கூட்டியே முடித்துக் கொண்டுள்ளது.