பனாமா சிட்டி, ஜூலை 28- விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் எழுச்சியால் வலதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த பனாமா அரசு, விலைகளைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. பனாமாவில் உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. அதைக் கட்டுப்படுத்த மறுத்த அரசு, தொழிலாளர் களின் ஊதியத்தில் கைவைக்க முடிவு செய்தது. ஆனால், பெரு நிறுவனங்களுக் கான சலுகைகள் தொடர்ந்தது மட்டுமில்லா மல், புதிய சலுகைகளும் அறிவிக்கப் பட்டன. தொழிற்சங்கங்களும், சமூக அமைப்புகளும் இந்த வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராகக் களமிறங்கின. தங்களுக்கு வேண்டிய சில அமைப்பு களை அழைத்து உடன்பாடு என்ற பெயரில் போராட்டத்தை சீர்குலைக்கும் வேலையில் அரசு இறங்கியது. ஆனால் தொழிற்சங்கங் கள் காட்டிய உறுதியால் மற்ற சமூக அமைப்பு களும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தன. பனாமாவில் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் மிகவும் பலம் வாய்ந்ததாகும். அதன் தலைமையும், சங்க உறுப்பினர்களும் போராட்டக்களத்தில் உறுதியாக நின்றனர். இந்த உறுதி, அரசைப் பணிய வைத்ததோடு போராடும் மக்களின் பிரதிநிதிகளோடு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வைத்தது. அதில் அரிசி, மீன், கோழி, காய்கறிகள் உள்ளிட்ட 72 பொருட்களின் விலைகள் உயராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சில அத்தியா வசியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் மாற்றம் ஏற்படாத வாறு பார்த்துக் கொள்ள உறுதிமொழி பெறப்பட்டிருக்கிறது. போராடிய அமைப்புகள் வைத்த கோரிக்கைகளில் கல்விக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காடு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை உடன்பாட்டில் இடம் பெறவில்லை. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் இது இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.