புனே,ஜன.23- நான் ஏன் காந்தியை கொன்றேன்? என்ற படத்தை மகாராஷ்டிராவில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது. மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு மதவெறியன் நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். கோட்சேவின் வாக்குமூலத்தை மூலமாக கொண்டு “நான் ஏன் காந்தியை கொன்றேன்” என்ற படம் தயாராகி உள்ளது. இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் அசோக் தியாகி இயக்கியுள்ளார். அமோல் கோல்ஹே நாதுராம் கோட்சேவாக நடித்துள்ளார். கல்யாணி சிங் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. படத்தை மகாராஷ்டிராவில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா படோலே வலியுறுத்தியுள்ளார். காந்திஜியின் கொலைகாரனை ஹீரோவாக சித்தரித்தால், அதை ஏற்க முடியாது. காந்தி மற்றும் அவரது சித்தாந்தத்தின் மூலம் நம் நாடு அறியப்படுகிறது. அவர் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். இந்தப் படத்தை மராட்டியத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என முதல்வரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக நானா படோலே செய்தியாளர்களிடம் கூறினார்.