சென்னை, மே 12- தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மற்ற நாட்களில் வரத்தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலையில் தேர்வு எழுதிவிட்டு மதியம் வீட்டிற்கு செல்கின்றனர். இந்த நிலையில், மே 13 ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிகின்றன. 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி சிறுவர்கள் இந்த ஆண்டு இறுதித்தேர்வு எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டது. வெள்ளியன்று தேர்வு முடிவதால் ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது.