சென்னை, ஏப். 19- தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே செவ்வாயன்று (ஏப். 19) நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அ.மலர்விழி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் ஆ.செல்வம் துவக்கி வைத்தார். போராட்டத்தை நிறைவு செய்து அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு பேசினார். வணிகவரி பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சா.டேனியல் ஜெயசிங், இந்து அறநிலையத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தெ.வாசுகி, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பாரி, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன், அரசு ஊழியர் சங்கத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் என்.வினோத், வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணி சாமி, சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுந்தரம்மாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கைதும்-காவல்துறையும்!
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முறையாக விடுப்பு எடுத்து வந்த ஊழியர்களை காவல்துறையினர் ஆங்காங்கே மடக்கி கைது செய்து போராட்டத்தை ஒடுக்க நினைத்தனர். ஆனாலும், அதையும் மீறி இந்த போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. 38 ஆண்டுகளாக பணி முடித்து ஓய்வு பெற்றவர்களுக்கு 2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு அந்திம காலத்தில் வாழ்க்கை நடத்த முடியுமா?, எனவே 9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், இனி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். அதேபோன்று சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக 1 லட்ச ரூபாயும், சமையல் உதவியாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதை அமைப்பாளர்களுக்கு 5 லட்சம் என்றும் சமையல் உதவி யாளருக்கு 3 லட்ச ரூபாயும் என்றும் உயர்த்தி வழங்க வேண்டும். 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். எனவே, 21 ஆம் தேதி நடைபெறும் மானியக் கோரிக்கையின்போது, ஏற்கெனவே சட்டமன்ற தேர்தலின்போது சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்த வாக்குறுதி நிறைவேற்றிட இந்த போராட்டத்தை நடத்தியதாக தலைவர்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
பின்னர், மாநிலத் தலைவர் கலா தலைமையில் மலர்விழி, பே.பேயத்தேவன், ஆ.பெரியசாமி, ப.சுந்தரம்மாள் ஆகியோர் முதல்வரின் தனி அலுவலர் ராம் பிரதாப், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.