புதுதில்லி, ஆக. 11 - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பறக்கும் முத்தம் (Flying Kiss) கொடுத்ததாக கூறப்படும் நிலையில், அதுதொடர்பான காட்சிகள் சிசிடிவி-யில் தெளிவாக பதிவாகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் (ஆகஸ்ட் 9) விவாதத்தில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த உரையின் நிறைவில் பாஜக எம்.பி.க்களை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்ததாகவும், இதன்மூலம் பாஜக பெண் எம்.பி.க்களிடம் ராகுல் காந்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார் என்றும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு எழுப்பினார். அத்துடன் பாஜக எம்.பி.க்களை அழைத்துச் சென்று, சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வமாக ராகுல் மீது புகார் அளித்தார். அதனடிப்படையில், ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தது குறித்து மக்களவையில் உள்ள சிசிடிவி-களில் உள்ள காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் முழுவதையும் ஆராய்ந்த போது, ராகுல் காந்தி முத்தம் கொடுத்ததாக கூறப்படுவது தெளிவாக சிசிடிவி-யில் பதிவாகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பெண் உறுப்பினர்கள் கொடுத்த புகாரில் முக்கிய ஆதாரமே சிசிடிவி காட்சிகள்தான். ஆனால், அதுவே தற்போது இல்லையென்றாகி இருக்கிறது.