சென்னை, ஜூலை 30- தமிழக காவல் துறையில் காவலர் முதல் டிஜிபி வரையிலான அனைவரது சீருடையிலும் ஒரே விதமான அடையாள ‘லோகோ’ ஜூலை 31 முதல் இடம்பெற உள்ளது. இதற்கான அறிமுக விழா வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறார். தமிழ்நாட்டில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் காக்கி நிற சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும், அவரவர் அதிகாரம், அடிப்படை தகுதிகளுக்கு ஏற்ப சீருடையில் நட்சத்திரம், வாள், அசோக சின்னம் போன்ற அடையாளங்கள் இருக்கும். எனினும், ஒட்டுமொத்தமாக ‘தமிழக காவல் துறை’ என்பதை குறிக்கும் வகையில், எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது. இந்த குறையை போக்கும் வகை யில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவரது சீருடையிலும் ஒரே மாதிரியான அடையாள ‘லோகோ’ கூடுதலாக நாளை முதல் இடம்பெறு கிறது. அதில், வில்லிபுத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசியக் கொடி உள்ளிட்டவற்றுடன் தமிழ்நாடு காவல், வாய்மையே வெல்லும் என ஆங்கிலத்திலும், ‘காவல்’ என தமிழிலும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏற்கெனவே உள்ள அடையாளச் சின்னங்களுடன் கூடுதலாக இந்த லொகோவும் இடம்பெறுகிறது. இதை அறிமுகப்படுத்தும் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடை பெறுகிறது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.