states

சென்னை காவலர்கள் மீது கொலை வழக்கு

சென்னை, மே 6- சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு காவலர்கள்  மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளியன்று (மே 6) கேள்வி நேரம் முடிந்ததும், சென்னையை சேர்ந்த விக்னேஷ் மரணம் மற்றும் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,“சென்னையைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் இறப்பு ‘சந்தேக மரணம்’ என முறைப்படி ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் மெஜஸ்டிக் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மருத்துவக் குழுவினரால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதன் அறிக்கை கிடைத்துள்ளது. அதில் விக்னேஷின் உடலில் 17 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள் ளதாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.  இதனடிப்படையில் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, ஏற்கனவே தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ் ஊர்க்காவல் படை காவலர் தீபக் ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்தி நடவடிக்கை எடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்த முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடந்த விதம் மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட முறை ஒன்று போல் இருப்பதால் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆகவே, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் காவல்துறையினர் உரிய விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். சம்பவங்களில் உரிய நடவடிக்கை நிச்சயமாக விரைவில் எடுக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.