states

மதுரையில் ரூ.35 கோடியில் நவீன தங்கும் விடுதி

சென்னை,ஏப்.18- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 35 கோடி ரூபாய் செலவில் நவீன தங்கும் விடுதி கட்டித்தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திங்களன்று(ஏப்.18) நடந்த கேள்வி நேத்தில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நவீன தங்கும் விடுதி கட்ட அரசு முன்வருமா? என திமுக உறுப்பினர் தளபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “கடந்த ஆண்டில் மதுரை எல்லீஸ் நகரில் 1.33 ஏக்கர் பரப்பளவில் 57 அறைகளில் 307 படுக்கை வசதிகளுடன் 35 கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வைபை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தங்கும் விடுதி அமைக்கப்படும்” என்றார். மேலும், திருக்கோயிலின் மேற்கு கோபுர நுழைவு வாயிலின் அருகில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் “பிர்லா விஷ்ரம்” பக்தர்கள் தங்கும் கட்டப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றி, கோயிலின் மேற்கு கோபுர நுழைவு வாயில் மற்றும் தெற்கு கோபுர நுழைவு வாயிலின் அருகிலுள்ள சொந்தமான கட்டடத்தையும் பக்தர்களுக்கான தங்கும் விடுதியாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இராமேஸ்வரத்திலும்  தங்கும் விடுதி

இராமேஸ்வரம் தொகுதி திமுக உறுப்பினர் காதர் பாஷா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,“ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 30 கோடி செலவில் 54 அறைகளுடன் 133 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. மேலும், ரூ. 50 கோடியில் வரைவு திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

 4 மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்: அமைச்சர்

வடசென்னை மாவட்டம் பெரம்பூர் தொகுதியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுமா? என்று திமுக உறுப்பினர் ஆர்.டி.சேகர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வீ.கணேசன்,“தமிழ்நாட்டில் இதுவரைக்கும் 56 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 69 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்றார். செங்கற்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கிரிசன்ட் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 72 ஆயிரம் இளைஞர்கள் பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரியிலும் நடத்தப்படுகிறது. சென்னை பெரம்பூரிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.