தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மே தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. அதில் பங்கேற்ற தலைவர்களும் தொண்டர்களும் மிகத் திருப்தியோடு, இரவு தூங்கச் சென்றனர். நள்ளிரவில் இடியென வந்தது ஒரு செய்தி. தோழர் எம்.என்.எஸ். அவர்கள் இயற்கை எய்தினார் என்று. எவராலும் நம்ப முடியவில்லை. அவருக்கு பெரிய நோய்களோ அல்லது உடல் உபாதைகளோ இருந்ததாக இதுவரை யாரும் அறிந்ததில்லை. எனவே தான் இச்செய்தி நம்ப முடியாததாக இருந்தது. திடீரென ஏற்பட்ட கடும் மாரடைப்பே அவரது மரணத்துக்கு காரணம் என தெரிய வந்தது.
தோழர் எம்.என்.எஸ். அவர்களை நான் முதன் முதலாக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் சந்தித்தேன். அப்போது அவர் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளராகவும் இருந்தார். அப்போது தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் கட்சி மாவட்டச் செயலாளராக இருந்தார். சிவகாசியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக எஸ்.ஏ.பி. என்னை அழைத்திருந்தார். அன்று என்னுடன் தோழர் எம்.என்.எஸ். அக் கூட்டத்தில் கலந்து கொண்டதோடு, அன்று இரவு சிவகாசி நாடார் லாட்ஜிலுள்ள அறையில் என்னுடன் தங்கினார். அந்த லாட்ஜில் அப்போது கட்டிலில் நான் படுத்துக் கொள்ள தோழர் எம்.என்.எஸ். அறையில் இருந்த மேஜையில் படுத்து தூங்கி விட்டார். கடுமையான கொசுக்கடி. கட்டிலில் கிடந்த நான் இரவு முழுக்க தூங்கவில்லை. அவரோ நிம்மதியாக தூங்கி விட்டார். காலையில் நான் அவருடன் எப்படி அவரால் தூங்க முடிந்ததது என்று ஆச்சரியமாக வினவினேன். அவர் நீங்கள் தூங்கல்லையா என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட மாநாட்டை ஒட்டி சிவகாசியில் நாடார் லாட்ஜில் தங்கிய போது இந்நிகழ்வை நான் தோழர்களிடம் பகிர்ந்து கொண்டேன். பொதுவாக தோழர் எம்.என்.எஸ். அவர்கள் கட்சிப் பணிகளின் போது எத்தகைய அசவுகரியங்களையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்லும் பண்பை நான் அன்றிலிருந்து பல நேர்வுகளில் கண்ணுற்றதுண்டு.
தோழர் எம்.என்.எஸ். அவர்கள் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளரான பின்னர் மிகவும் பின் தங்கிய மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் கட்சிப் பணிகளில் பல முக்கிய முன்னெடுப்புகளை முயற்சித்தார். அதில் ஒன்று தான் கட்சி நிதி வசூலை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியது. ஒரு மாதம் முழுக்க கட்சியின் அனைத்து தோழர்களையும் வெகுஜன வசூலில் ஈடுபடுத்தி, வெகுஜன வசூலின் மூலமே கட்சிக்காக நிதியை உருவாக்குகிற திட்டம். இன்றும் தமிழகக் கட்சிக்கே அது ஒரு முன்னோட்டமாகவும், முன்மாதிரியாகவும் உள்ளது. விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இல்லாமலும், அம்மாவட்ட கட்சி பொறுப்பில் இல்லாமலிருந்தும் கூட விருதுநகர் மாவட்டத்தில் வெகுஜன வசூலைத் திட்டமிடுவதில் இன்றும் அவரது பங்காற்றுதல் உண்டு. தற்போது விருதுநகர் மாவட்டத்திற்கு நான் பொறுப்பாளராக இருந்தாலும் இத்தகைய பணிகளுக்கு அவர் எப்போதும் உதவ முன் வந்திருப்பார். அவர் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின் நான் குமரி மாவட்டச் செயலாளராக பல ஆண்டுகள் நீடித்திருந்தேன். அரசியல் ஸ்தாபன பணிகளுக்காக அவர் குமரி மாவட்டம் வரும் போதும், பின்னர் நானும் மாநிலச் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் சக மாநில செயற்குழு உறுப்பினர் எனும் வகையிலும் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.பல தோழர்களிடம் காண முடியாத பல நற் பண்புகளை அவரிடம் காண முடிந்தது. கமிட்டிகளில் கருத்து கூறும் போது சுருக்கமாகவும், தெளிவாகவும், தயக்கமின்றியும் கூறுவார். அவரது பேச்சில் செயற்கையான எந்த பாவனையும் இருக்காது. கோப, தாபம் இருக்காது. தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியான கருத்துக்களைக் கூறினாலும், அதற்கு மாறான முடிவை கட்சி எடுத்தாலும், அதில் முரண்படாமல் அம்முடிவுகளை அமலாக்குவதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவார்.நான் கடந்த நான்கு ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்திற்கு பொறுப்பாளர். ஆனால் கோவிட் காலத்தில் முழு முடக்கம். என்னால் அங்கு செல்ல இயலவில்லை. அது போல் உள்ளாட்சி தேர்தல் காலம்.
நான் குமரி மாவட்ட தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டிய நிலை. இப்படிப்பட்ட தருணங்களில் விருதுநகர் மாவட்டக் கமிட்டி கூட்டங்கள், பணிகளில் அவரைக் கலந்து கொள்ள வேண்டி னால் எவ்வித மறுப்பும் கூறாமல் கலந்து கொண்டதை நினைத்துப் பார்க்கிறேன். பல மாவட்ட மாநாடுகள், ஸ்தாபன பரிசீலனைக் கூட்டங்கள், விசா ரணைகள் ஆகியவற்றில் அவரோடு இணைந்து கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததுண்டு. அப்போதெல்லாம் அவர் எவ்வித சார்புத் தன்மையும் இல்லாமல் பிரச்சனைகள் அடிப்படையில் கருத்துக்கள் கூறுவதையும், அதன் மூலம் கட்சிக்குள் ஒற்றுமையை யும், ஒருங்கிணைந்த செயல்பாட்டை உருவாக்குவதிலும் பெரும் பங்களிப்பை செய்துள்ளார். கட்சியின் மாநிலக்குழு எந்த பணி கொடுத்தாலும் இது வரை எந்த மறுப்பும் கூறாமல் அதை ஏற்றுச் செயல்படுத்தியவர் அவர். சவாலான காலகட்டத்தில் தீக்கதிர் பொறுப்பை ஏற்று மிகச் சிறப்பாக அதன் பணிகளை முன்னெடுத்த நேரத்தில் அதன் பலன் கிடைப்பதற்குள் அவரை இழந்து நிற்கிறோம்.
கடந்த 15 ஆண்டுகளாக நான் சென்னைக்கு செயற்குழு கூட்டத்திற்கு செல்லும் போதெல்லாம் அவரும், நானும் கட்சி அலுவலகத்தில் ஒரே அறையில் தங்கி வந்துள்ளோம். பல அரசியல் ஸ்தாபன விசயங்களில் கருத்து பரிமாற்றம் செய்துள்ளோம். தனிப்பட்ட முறையில் பேசும் போதும், கமிட்டிகளில் பேசும்போதும் எங்கள் இருவருக்குமான கருத்துக்கள் பெரும்பாலும் ஒத்திசைவோடு இருக்கும். தனிப்பட்ட வசதிகளில் குறைவு இருந்தால் கூட அவர் அதை வெளிப்படுத்துவது இல்லை. பெரும்பாலும் அவருக்கும் சேர்த்து நானே அக்குறைகளைக் களைய உரிய இடங்களில் முறையிடுவேன். எனவே அத்தகைய குறைகளை என்னிடம் பகிர்ந்து கொள்வார். என் குடும்ப நண்பராகவும் அவர் இருந்ததால் என் மனைவி உடல்நலம், மகள், மகன் குடும்பம் குறித்து என்னிடம் விசாரிப்பதுண்டு. என் குடும்பத்தினரும் அவரை தங்கள் குடும்ப உறுப்பினராகவே கருதினர். தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மரணம் கட்சிக்கு மாபெரும் இழப்பு. ஈடுசெய்ய முடியாத இழப்பு எனும் வார்த்தை வெறும் சம்பிரதாயமான ஒன்றல்ல. மாறாக உண்மையின் வெளிப்பாடு. அவரது அரசியல் தெளிவு, ஸ்தாபன ஞானம், தெளிந்த பார்வை, அயராத உழைப்பு வேறு எவராலும் ஈடு செய்ய இயலாதது. அவரது நினைவுகள் நம்மை தினசரி வாட்டிக் கொண்டே இருக்கின்றது.அவரது பணிகள், அர்ப்பணிப்பு, தெளிவான பார்வை ஆகிய அருங்குணங்கள் தொடர்ந்து நம்மை வழிநடத்தட்டும்.